Saturday, July 12, 2008

கண்டேன் அவர் திருப்பாதம் (திருக்கயிலாய யாத்திரை) -11

4ம் நாள் மாங்டியிலிருந்து புத்தி வரை (21 கி.மி நடைப்பயணம்)





பண்ணின் இசையாய் நின்றாய் போற்றி




பாவிப்பார் பாவ மறுப்பாய் போற்றி




எண்ணும் எழுத்துஞ் சொல்லானாய் போற்றி




என் சிந்தை நீங்கா இறைவா போற்றி




விண்ணும் நிலனும் தீயானாய் போற்றி




மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி




கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி




கயிலை மலையானே போற்றி போற்றி (7)





இந்த நான்காவது நாளை நீர் வீழ்ச்சிகள், தொங்கும் பாறைகள் மற்றும் நதி சங்கமங்களின் நாள் என்று அழைக்கலாம்.

நடைப்பயணம் ஆரம்பித்த நாளும் இன்றே.





கெஸ்கூவில் இரவு முழுவதும் மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. அதிகாலை சுமார் 4 மணியளவில் மழை நின்றது. காலை 5 மணிக்கே GREFயினர் பாதையை சரி செய்ய முற்பட்டனர், காலை 7 மணியளவில் எல்லா மண்ணும் நீக்கப்பட்டு பாதை சரி செய்யப்பட்டு அந்த இறைவனுக்கும், எங்களுக்காக உழைத்தவர்களுக்கும் நன்றி கூறி பேருந்தில் புறப்பட்டோம். நேபாள பகுதியில் முதல் பனி மூடிய சிகரம் கண்ணில் பட்டது, அது எம்பெருமானின் பெயரையே கொண்ட சிகரம், ஆம் நீலகண்ட சிகரம் , அந்த நீலகண்டனை வணங்கி புறப்பட்டோம், எங்களை ருத்ர அவதாரமான அனுமன் ஆசிர்வதிப்பது போல் ஒரு குரங்கு தோன்றியது. பின் சிறிது து‘ரம் சென்றதும் பங்லா என்ற இடத்தில் ஒரு நீர் வீழ்ச்சியில் ஏற்பட்ட நிலச்சரிவு நாங்கள் நடந்து கடப்பதற்கு ஏதுவாக சரி செய்யப்பட்டது, எனவே நாங்கள் நில சரிவை கடந்து அடுத்த பக்கம் சென்று பின் ஜீப் மூலம் காலை 8 மணி அளவில் மாங்டி(1560 மீ உயரம்) அடைந்தோம்.



பங்லா நீர் விழ்ச்சியில் ஏற்பட்ட நிலச்சரிவு Bulldozer கொண்டு சரிசெய்யப்படுகின்றது.

பொன்னார் மேனியனை, புலித்தோலை அரைக்கசைத்த புனிதனை, மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அந்தவனை, மாமணியை, திருக்கயிலையில் உறையும் மாணிக்கத்தை , அம்மை மரகதத்தை தரிசிக்க செல்லும் உண்மையான யாத்திரை இங்கிருந்து தான் துவங்குகின்றது. ஆம் எம்பெருமானை தரிசனம் செய்ய நடைப்பயணம் இங்கிருந்து தான் துவங்குகின்றது. எங்கள் பயணம் ஒரு நாள் தாமதமாகி விட்டதால் எங்கள் பயணத்தில் சிறு மாற்றம் செய்யப்பட்டது. திட்டப்படி முதல் நாளே நாங்கள் மாங்டியிலிருந்து 8 கி.மி து‘ரம் உள்ள காலா (Gala) என்ற இடத்தை நடைப்பயணம் மூலம் அடைந்து அங்கு இரவு தங்கி அடுத்த நாள் செங்குத்தான 4444 படிகள் கீழிறங்கி மால்பாவை (Malpa) அடைந்து பின் புத்தி (Budhi) சென்றிருக்க வேண்டும். அவ்வாறு செல்லும் போது நம் பொருட்கள் நம்முடன் வராது ஆகவே நமக்கு அவசியம் வேண்டிய பொருட்களை மட்டும் ஒரு பையில் எடுத்துச்செல்ல வேண்டும். மற்ற பொருட்கள் எல்லாம் நேராக புத்திக்கு வந்து சேரும். தாமத்தினால் நாங்கள் காலா (Gala) செல்லாமல் நேராகவே புத்திக்கு (Budhi) அந்த வழியில் செல்ல முடிவு செய்தார் எங்கள் குழுத்தலைவர்(L.O) அவர்கள்.



மாங்டியில் இருந்து கண்ணுதலானைக் காண நடைப்பயணம் ஆரம்பம்



(ஆசிரியருடன், தபஸ்வி, தனுஷ்கோடி மற்றும் போர்ட்டர்)


அரசு நடத்தும் இந்த யாத்திரையின் சிறப்பு இதுதான் நாம் கைலாயம் அடைவதற்கு முன்னால் நம்முடைய உடல் முழுத்தகுதி உடையதாய் ஆவதற்கு வேண்டியவாறே யாத்திரை அட்டவனை அமைந்துள்ளது. நமக்கு கிரி வலம் செய்ய வசதியாக நடைப்பயிற்சியும் கிடைக்கின்றது அதே சமயம் போதிய ஓய்வும் நமக்கு கிடைக்கின்றது எனவே கைலாய தரிசனம் எந்த சிரமமும் இல்லாமல் நாம் செய்ய முடிகின்றது. இந்த மாங்டியிலிருந்து காலா, காலாவிலிருந்து மால்பா வழியாக புத்தியும் இவ்வாறு அமைந்ததே. இப்போது அரசு முடிந்த வரை இந்தப் பாதையையும் பேருந்துகள் செல்லும் பகுதியாக மாற்ற முடிவு செய்துள்ளது, இனியும் பத்து வருடம் கழித்து நேபாளத்திலிருந்து ஜ"ப்பில் நாம் டார்சன் வரை செல்வது போல் டெல்லியிலிருந்து ஜீப்பில் செல்வது சாத்தியமாகலாம்.



தொங்கும் பாறைகளை கடந்து மலையரசன் பொற்பாவையைக்காண நடக்கின்றோம்.


இந்த வாய்ப்பை தந்த அந்த முக்கண் முதல்வனுக்கு நன்றி கூறி, நமச்சியவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க, இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க, கோகழி ஆண்ட குருமதன் தாள் வாழ்க , ஆகமமாகி ன்று அண்ப்பாண் தாள் வாழ்க, ஏகன் அனேகன் இறைவன் தாள் வாழ்க , ஈசன் அடி போற்றி, எந்தை அடி போற்றி, தேசன் அடி போற்றி, சிவன் சேவடி போற்றி, நேயத்தே ன்ற மலனடி போற்றி , மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி சீரார் கைலை மலையான் அடி போற்றி, ஆராத இன்பம் அருளும் மலை போற்றி, என்று எம்பெருமானுடைய இனையார் திருவடிகளை வணங்கி, அங்கு எங்களை வழியனுப்ப வந்திருந்த அந்த இடத்து குழந்தைகளுக்கு சாக்கலேட்டுகள் வழங்கி எங்கள் நடைப்பயணத்தை துவக்கினோம்.





சில கட்டுரைகளில் நான் படித்திருந்தேன் அங்கிருக்கின்ற குழந்தைகளுக்கு சாக்கலேட் எடுத்து செல்வது அவர்களை மகிழ்ச்சி படுத்தும் என்று அவ்வாறே எனவே அவர்களுக்காகவும் சாக்கலேட் எடுத்து சென்றிருந்தேன். மலையில் முதல் நாள் நடைப்பயணம் சிறிது கடினமானதாகவே இருந்தது மேலும் இரவு சரியாக து‘ங்காததாலும் இருக்கலாம். குறிப்பாக இறக்கங்களில் முழங்கால் முறிந்து விடும் போல் இருந்தது.



காலை நேரத்தில் இவ்வாறு ஒரு கடினமான இறக்கத்தில் நான் இறங்கிய போது என் தாய், ஜகன் மாதா, சகல செல்வங்களும் தரும் இமய கிரி ராஜ தனயை எனக்கு காட்சி கொடுத்தாள் என்றே னைக்கின்றேன் அந்த கழ்ச்சியை னைத்தாலே இன்றும் உடம்பு புளகாங்கிதம் அடைகின்றது. கஷ்டப்பட்டு நான் இறங்கி கொண்டு இருந்த போது ஒரு வயதான அம்மா அந்த மலை மக்களுக்கே உரிய பாரம்பரிய உடையில் , நான் இறங்குவதை கனிவுடன் பார்த்துக் கொண்டிருந்தார் அதுவும் பாதை நடுவிலிருந்து, அனேகமாக இந்த மலை வாழ் மக்கள் அனைவரும் புதியவர்களான நமக்கு வழி விட்டு பாதை விட்டு ஒதுங்கி ற்பர். மேலும் ஒம் நமசிவாய என்று வாழ்த்தும் கூறுவர், ஆனால் இந்த மூதாட்டி அவ்வாறு செய்யாமல் நடு வழியில் நின்று தன் கருணைப்பார்வையை என் மீது செலுத்தினார். அந்த பார்வதி அம்பாளே எனக்கு காட்சி தந்து ஆசி கூறியதாக தோன்றியது, அதற்கு பின் கிட்டத்தட்ட 10 நாட்கள் பல இறக்கங்களில் நான் இறங்கும் போதும் அவ்வாறு சிரமம் இருக்கவில்லை. அது அந்த ஜகன் மாதாவின் கருணை என்றே நினைக்கிறேன்.

நாம் எடுத்துச்செல்லும் கைத்தடி (Walking stick) இத்தகைய இறக்கங்களிலேயே நமக்கு மிகவும் உபயோகமாக உள்ளது அதன் முக்கியத்தை அப்போது உணர்ந்தோம் ஆகவே தங்கள் தாருசூலாவிலாவது கைத்தடி வாங்கி செல்ல வேண்டியது மிகவும் அவசியம். இறக்கங்களிலே இறங்கும் போது எங்களுக்கு இலவசமாக கைத்தடி வழங்கிய அமர்நாத் சமிதியினரையும் அவர்களை அவ்வாறு செய்யத்தூண்டிய அம்மையப்பனுக்கும் ஆயிரம் நன்றிகள் கூறினோம். இப்பாதையின் ஒரு பகுதி காளி நதியின் கரை ஓரம் அமைந்துள்ளதால் மழை பெய்து காளி நதியில் வெள்ளம் செல்லும் போது இந்தப்பாதையில் செல்ல முடியாது, நாங்கள் சென்ற போது மழைக் காலம் முடிந்து விட்டிருந்தபடியால் நாங்கள் எந்த சிரமும் இல்லாமல் செல்ல முடிந்தது.


முக்கனி ( காளி நதி - தொங்கும் பாறை - நீர் வீழ்ச்சி)

குதிரை வாடகைக்கு அமர்த்தியிருந்தும் முடிந்த வரை நடப்போம் என்று நடந்தேன். நடந்து சென்ற பாதையோ கற்கள் றைந்த ஒற்றையடிப்பாதை, ஒருபக்கம் நெடிதுயர்ந்த மலை மேலிருந்து கற்கள் பாறைகள் விழலாம், லச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவே கவனமாக செல்ல வேண்டும், அடுத்த பக்கமோ கிடு கிடு பாதாளம் அதிலே 100 கி. மீ வேகத்தில் பொங்கும் நுரையுடன் ஆக்ரோஷமாக ஓடும் காளி நதி , நடு நடுவே நாம் செல்லும் பாதையிலும் நீர் வீழ்ச்சிகள் நாம் செல்லும் பாதையில் அந்த நீரின் ஓட்டத்தையும் நாம் கடந்து செல்ல வேண்டும், மேலும் சில இடங்களில் பாதை மலையை வெட்டி ஒருவர் செல்லக்கூடிய உயரமே உடையதாய் குடையப்பட்டிருந்தது. இந்த இடங்கள் தொங்கும் பாறைகள் (Hanging Rocks) என்று அழைக்கப்படுகின்றன. குதிரைகள் சென்றதால் அவ்ற்றின் எச்சமும், தண்ரால் நனைந்து பாதை வழுக்கலாக இருந்தது. நீர் வீழ்ச்சிகளிடையே நனைந்து கொண்டே ஓம் நமசிவாய மந்திரம் செபித்துக் கொண்டு நடந்து செல்லும் போது அந்த புனல் விரி நறுங்கொன்றை போதந்த கனல் புரி யனல் புல்கு கையவான சிவபெருமானே களைத்து நடந்து வரும் தன் அன்பர்கள் குளிர அமுத தாரை வர்ஷிக்கின்றான் போல இருந்தது. இவ்வழியில் நீர் வீழ்ச்சிகளுக்கிடையே நாம் நடந்து செல்ல வேண்டும் என்பதாலும், மழை பெய்யலாம் என்பதாலும் ரெயின் கோட் அந்து செல்வது நல்லது.



லகன்பூரில் காலை சிற்றுண்டி

எங்களுக்கு காலை சிற்றுண்டி லகன்பூர் என்ற இடத்தில் KMVN ஏற்பாடு செய்திருந்தது லக்கன்பூரை தாண்டியவுடன் ஒரு பெரிய நிலச்சரிவின் வடு, முழுவதுமாக சரி செய்யப்படாமல் அப்படியே கிடந்தது, அதிலேயே கடந்து சென்றோம். வழியில் இரண்டு பக்கமும் வழியெங்கும் வித விதமான நீர் வீழ்ச்சிகள், ஒரு வெள்ளி கம்பி போல் ஒரு சிறிய தாரையுடன் ஒன்றென்றால் அடுத்தது மிக அகலமான நீர் வீழ்ச்சி, ஒரேயடியாக மேலிருந்து அப்படியே நதிக்குள் விழுகும் நீர் வீழ்ச்சிகள், பல கிளைகளுடன் பாயும் நீர் வீழ்ச்சி, துளித் துளியாய் சிதறும் நீர்வீழ்ச்சி அதில் சூரிய க்கதிர்கள் வர்ண ஜாலங்கள் காட்டின, பால் போல வெண்மையாக பாயும் நீர்வீழ்ச்சி, கற்கள் மேலே விழுவது போல் வேகத்துடன் விழும் நீர்விழ்ச்சி என்று எத்தனை விதமான நீர்வீழ்சிகள் வழியில். அத்தனை நீர் வீழ்ச்சிகளும் தங்கள் தண்ரை காளி நதியில் கொண்டு சேர்த்தன, அது மஹா ராஜவிற்கு குறு நில மன்னர்கள் கப்பம் கட்டுவது போன்றிருந்தது. வழியில் பல பூர்விக பாலங்களையும் கடந்து செல்ல வேண்டி இருந்தது.

இவ்வளவு துன்பங்களுக்கு இடையிலும் இயற்கை அன்னையின் அதிகம் சேதப்படாத அழகை கண்டு களித்தோம். இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல எதிர்பக்கம் நேபாளப்பகுதியில் அதிக மரங்கள் இருப்பது போல் தோன்றியது. அதிக மக்கள் தொகை இல்லாததாலும் இந்தப்பக்கம் போல் அந்த பக்கம் பாதை இல்லாததாலும் இருக்கலாம். மதிய உணவிற்கு மால்பா (2080 அடி உயரம்) என்னும் இடத்தை அடைந்தோம், 1998ம் ஆண்டு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு பல யாத்திரிகள் இறந்த இடம். இப்போது அந்த இடத்தில் ஒரு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த இடம் ஒரு முகாமாக இருந்தது இந்த நிகழ்ச்சிக்குப்பின் இப்போது அங்கு முகாம் அமைப்பதில்லை.

மதிய உணவிற்குப்பின் அடியேன் சிறிது து‘ரம் நடந்தும் சில இடங்களில் குதிரையிலும் பயணம் செய்தேன், குதிரைக்க்காரர்களுக்கு இந்த பாதை நன்றாக தெரியும் என்பதால் எந்த இடங்களில் குதிரையில் செல்லாம் என்பதை அறிந்திருந்தனர். நீர் வீழ்ச்சிகளை கடக்கவும் அவர் பெரிதும் உதவியாக இருந்தார். மாலை மூன்று மணி அளவில் லாமாரி ( Lamari -2500 அடி உயரம்) என்னும் இடத்தை அடைந்தோம் அங்கு ITBPயினர், காபியோடு எங்களை உபசரித்தனர். அங்கு நமது தமிழ்நாட்டை சார்ந்த ITBP யில் பணி புரியும் சிவ குமார் என்பவரை சந்தித்தோம். அவருடன் ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டோம் அங்கிருந்து புத்தி மலை தெரிந்தது. இந்த மலையைத்தான் நாளை நாம் கடக்க வேண்டும் என்று எங்கள் குதிரைக்காரர் கூறினார்.

இங்கு ITBPயினரின் தன்னலமற்ற சேவையைப்பற்றி ஒரு குறிப்பு, யாத்திரிகளுக்கு நடை பயணத்தின் போது தேனீர், சிப்ஸ் முதலியவற்றை தங்களுடைய ரேஷனிலிருந்துதான் அவர்கள் வழங்குகின்றனர். அவர்களுக்கு இதற்காக தனியாக பொருட்கள் வருவதில்லை. அதற்குப்பிறகு ஒரு மிகப்பெரிய Tingha waterfall என்ற நீர்வீழ்ச்சியைக் கடந்து ஒரு பாலத்தின் வழியாக புத்தியை (2740 மீ உயரம்) அடைந்தோம். எங்களுடன் ITBP ஜவான்கள் நான்கு பேர் காவலுக்கு வந்தனர், உத்தராஞ்சல் அரசின் ஒரு மருத்துவரும் கூட வந்தார்.

வழியில் ஓடி வரும் ஆறுகள்


இந்த நான்காவது நாளை நீர் வீழ்ச்சிகள், தொங்கும் பாறைகளின் மற்றும் நதி சங்கமங்களின் நாள் என்று அழைக்கலாம். புத்தி முகாமை அடைந்த போது கால்கள் விண் விண் என்று வலித்தது முதல் நாளே கிட்டத்தட்ட 22 கி.மீ து‘ரம் நடந்ததால். காலுக்கு தைலம் தடவிக்கொண்டு வலிக்கு மருந்து சாப்பிட்டோம். முகாமை அடைந்தவுடன் இதமாக எலுமிச்சை ரசம் தந்தனர். பின் சுடு தண்ரில் நன்றாக குளித்தோம். புத்தி முகாமில் அழகான பூக்கள் நிறைந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. முகாமை ஒட்டியே காளி நதி பாய்கின்றது. அன்று இரவு ஒரு சோதனையாக நில நடுக்கத்தையும் உணர்ந்தோம்.

No comments: