Thursday, November 27, 2008

கண்டேன் அவர் திருப்பாதம் (திருக்கயிலாய தரிசனம்) -25

சீனப்பகுதி் யாத்திரையின் நிறைவு நாட்கள்


19ம் நாள் - கிஹூவிலிருந்து தக்லகோட் வரை பேருந்து பயணம் 100 கி.மீ



செய்ய மலர்மேலான் கண்ணண் போற்றி


தேடியுணராமை நின்றாய் போற்றி


பொய்யா நஞ்சுண்ட பொறையே போற்றி


பொருளாக வென்னையாட் கொண்டாய் போற்றி


மெய்யாக வானஞ் சுகந்தாய் போற்றி


மிக்கார்க ளேத்துங் குணத்தாய் போற்றி


கையானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி


கயிலை மலையானே போற்றி போற்றி (20)



திருக்கயிலாய யாத்திரையின் 19ம்நாள் காலை எழுந்தவுடன் ஐந்தாவது முறையாக மானசரோவரில் குளித்தோம்,


இறைவனின் தெற்கு முக தரிசனம் கண்டோம்,


தூரத்திலிருந்து மானசரோவரில் சூரியன் நடத்தும் ஜாலத்தை கடைசி முறையாக ரசித்தோம்.



பின் கடைசி சிறிய யாகத்தை மானசரோவர் கரையில் நடத்தி, சிவசக்திக்கு அருமையான தரிசனத்திற்க்கு நன்றி கூறினோம்.


காலை உணவை முடித்து பேருந்து மூலம் தக்லகோட்டிற்கு புறப்பட்டோம்,


கிஹூவிலிருந்து சிறு தூரத்தில் மானசரோவரையும், இராக்ஷஸ் தால்லையும் இனைக்கும் கங்கா சூ கால்வாயை கடந்தோம்.


பின் குர்லா மந்தாத்தா மலைகளை கடந்து இராக்ஷஸ் தால் அடைந்தோம். வரும் போது இருந்தது போல் இன்று கைலாயத்தில் மேக மூட்டம் இல்லை நல்ல தரிசனம் கிடைத்தது.



இராக்ஷஸ் தால் ஏரியிலிருந்து திருக்கயிலாய தரிசனம்


(சென்ற போது முதல் தரிசனம் கிடைக்கவில்லை

ஆனால் வரும் போது ஐயன் ஏமாற்றவில்லை)



பேருந்தை நிறுத்தி அனைவரும் இறங்கி, பண் மொய்த்த இன் மொழியாள் பயம் எய்த மலை எடுத்த உன்மத்தன் உரம் நெரித்து அன்று அருள் செய்த சிவபெருமானுக்கு ஓம் மங்களம் பாடி இந்த யாத்திரையின் கடைசி முறையாக திருக்கயிலாயத்தை தரிசனம் செய்து கீழே விழுந்து வணங்கி அருமையான யாத்திரைக்கு லக்ஷக்கணக்கில் நன்றி கூறி புறப்பட்டோம்.




தக்லகோட் வரும் வழியில் கர்னல் ஜொராவர் சிங் அவர்களின் நினைவிடத்தை கண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினோம். சீனாவிடமிருந்து கைலாயத்தை மீட்பதற்காக பத்தாயிரம் சீக்கிய வீரர்களுடன் கிளம்பி வந்த தியாகி கர்ன ஜொராவர் சிங், சரியான சமயத்தில் புறப்பட ‘ததால், இவருடைய வீரர்கள் டிசம்பர் மாத பனியினாலும், பட்டினியாலும் மாண்டனர், இவரும் தியாகியானார். சீன கலாச்சார புரட்சியின் போது இவர் சமாதி சிதைக்கப்பட்டது, இப்போது ஒரு நினைவிடம் மட்டுமே அங்கு உள்ளது. பின் ஒரே இறக்கம் மாலை மூன்று மணியளவில் தக்லகோட்டை வந்தடைந்தோம். தக்லகோட்டில் அன்றைய தினம் ஓய்வு எடுத்தோம்.


ளப்பறும் கருணையினால் ஐயனின் தாளடி நீழலில்


******************


யாத்திரையின் 20ம் நாள்: ஓய்வு நாள்.


மேல்வைத்த வானோர் பெருமான் போற்றி

மேலோடு புரமூன்று மெய்தாய் போற்றி

žலத்தான் றென்னிலங்கை மன்னன் போற்றி

சிலையெடுக்க வாயலற வைத்தாய் போற்றி

கோலத்தாற் குறைவில்லான் தன்னை யன்று

கொடிதாக காய்ந்த குழகா போற்றி

காலத்தாற் காலனையும் காய்ந்தாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி (21)


ஏனென்றால் இந்தியாவில் இருந்து வரும் குழுவினர் அடுத்த நாள் லிபு கணவாயை கடப்பர். மேலும் ஏதாவது குழப்பம் ஏற்பட்டால் சீனாவில் ஒரு நாள் யாத்திரிகளுக்கு கிடைக்கும் என்பதால் இவ்வாறு ஓய்வு நாட்கள் தரப்பட்டுள்ளன. எங்கள் குழுவினர் இன்று கோஜார்நாத் என்ற இடத்திற்கு சென்றோம். இவ்விடம் கர்னாலி நதியின் கரையில் உள்ளது. வழியெங்கும் பனி மூடிய சிகரங்கள். கோதுமை வயல்கள், கைலாயம் சென்ற வழி போல் வெறுமையாக இல்லை. இங்கு ஒரு புத்த விகாரம் உள்ளது, சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முந்திய கோவில் என்கின்றனர். இக்கோவிலின் புத்தர் 7 தடவை பேசியதாக ஐதீகம், எனவே இவர் பேசும் புத்தர் என்றும் அழைக்கப்படுகின்றார். கலாச்சார புரட்சியின் போது žனர்கள் இப்புத்தர் சிலையை உடைக்க வந்த போது இங்குள்ள மக்கள அவ்வாறு செய்ய வேண்டாம் என்று வேண்டிய போது சீனர்கள் உங்கள் புத்தர் ஏதாவது அதிசயம் செய்து காட்டினால் விட்டு விடுகிறோம் என்று கூற புத்தரும் பேசினாராம் எனவே சீனர்கள் திரும்பி சென்று விட்டனராம்.


கோஜார்நாத் புத்த விகாரம்



சிலர் இங்குள்ள சுவாமிகளை இந்துக் கடவுள்களாகவும் போற்றுகின்றனர். போதிசத்துவரை இலஷ்மணன், வஜ்ரபாயை இராமர் மற்றும் மஞ்சுஸ்ரீயை žதாதேவி என்றும் கூறுகின்றனர். தங்கத்தில் மின்னுகின்றனர் மூவரும். மேலும் அவலோகேஸ்வரர் விக்கிரமும் உள்ளது. வேறு எங்கோ பிரதிஷ்டை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட விக்கிரகங்கள் இறைவன் எண்ணப்படி வண்டியின் அச்சு முறிந்ததால் பின் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறுகின்றனர். புத்த விகார கமிட்டியினர் எங்களை வரவேற்று சீன பாயில் தேநீரும் வழங்கினர். அங்கிருந்து திரும்பி வந்து விகாரத்தின் மேல் தளத்தில் சென்று சுற்ரிலும் உள்ள பனி சூழ்ந்த மலைச் சிகரங்களை இரசித்தோம். அங்கிருந்து திரும்பி வந்து பின் மதியத்திற்கு மேல் தக்லகோட்டில் உள்ள திபெத்தியர்களின் மார்க்கட்டிற்கு சென்று சென்று வழியில் உதவி செய்தவ்ர்களுக்காக பரிசு பொருட்களை வாங்கினோம். பின் அடுத்த நாள் நம் தாய் நாட்டிற்கு, திரும்புகிறோம் என்ற மகிழ்ச்சியில் உறங்கச் சென்றோம். žன யுவான்களை மீண்டும் இந்திய ரூபாயாக மாற்றிக் கொண்டோம்.


21ம் நாள் - சீனப்பகுதியில் தக்லகோட்டிலிருந்து லிபு கணவாய் வரை பேருந்து பயணம்



அடுத்த நாள் காலையில் சீக்கிரம் எழுந்து பொருட்கள் அனைத்தையும் சரியாக அடுக்கி கட்டி தயாராக வைத்தோம். சீன சுங்க அதிகாரிகள் வந்து எங்கள் பாஸ்போர்ட்டையும் விசாவையும் சரிபார்த்தனர். பின் அவர்கள் உடன் வர பேருந்தில் லிபு கணவாய்க்கு புறப்பட்டோம். வழியில் பேருந்தில் சிறு கோளாறு, நின்று நின்று சென்றது. அங்கே காத்துக் கொண்டிருக்கும் 16வது குழுவினரை நினைத்துப் பார்த்தோம். பின் கடைசி மூன்று கிலோ மீட்டரை குதிரை மூலம் ஏறினோம். (இறங்கும் போது குதிரையை பயன்படுத்தவில்லை என்பது ஏன் என்று அனைவரும் அறிந்ததே) நாங்கள் லிபு கணவாயை அடைந்த போது நல்ல வெயில் திரும்பி வரும் போதும் எந்த சிரமமும் இருக்கவில்லை. ITBPயினரும், எங்கள் போர்ட்டரும், குதிரைக்காரரும் எங்களுக்காக காத்துக் கொண்டு இருந்தனர். எங்களை பாதுகாப்பாக இந்தியாகொண்டு வந்த சேர்த்த இறைவனுக்கும் இறைவிக்கும்


கள்ளி முது காட்டில் ஆடி கண்டாய்

காலனையும் காலாற் கடிந்தான் கண்டாய்

புள்ளியுழை மானின் தோலன் கண்டாய்

புலியுரி சேராடை புனிதன் கண்டாய்

வெள்ளி மிளிர் பிறை முடிமேற் சூடி கண்டாய்

வெண்ற்றான் கண்டாய் நற் செந்தில் மேய

வள்ளி மணாளற்கு தாதை கண்டாய்

கயிலை மலை உறையும் மணாளர் தானே

நன்றி கூறி திரும்பி வரும் பயணத்தை தொடங்கினோம்.



சிவசக்தியின் அபார கருணையினால் அவர்களால் அழைக்கப்பட்டு அவர்களின் அருமையான தரிசனம் பெற்று இந்திய எல்லையை தொட்டோம்.

No comments: