Monday, January 26, 2009

கண்டேன் அவர் திருப்பாதம் (திருக்கயிலாய தரிசனம்) -29

26ம் நாள் ஜாகேஸ்வரிலிருந்து டெல்லி பேருந்து பயணம்
*********

அப்பர் பெருமான் அருளிச்செய்த
போற்றித் திருத்தாண்டகம்


திருக்கயிலாயம்

உரியா உலகினுக் கெல்லாம் போற்றி

உணர்வென்னு மூர்வதுடையாய் போற்றி

எரியாய தெய்வச் சுடரே போற்றி

ஏசுமா முண்டியுடையாய் போற்றி

அரியா அமரர்கட் கெல்லாம் போற்றி

அறிவே அடக்கமுடையாய் போற்றி

கரியானுக் காழியன் றீந்தாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி (27)

****************





ஜாகேஸ்வரர் கோவில் வளாகம்

யாத்திரையின் 26ம் நாள் அதிகாலையில் எழுந்து KMVN சுற்றுலா விடுதிக்கு நேர் எதிரே உள்ள ஜாகேஸ்வர் கோவில் வளாகத்திற்கு சென்றோம், இந்த வளாகத்திலே மொத்தம் 200க்கும் மேற்பட்ட தெய்வ சந்திகள் உள்ளன. தேவதாரு மரங்கள் நிறைந்திருப்பதால் தாருகாவனம் என்றும் அழைக்கப்படுகின்றது.ஒரு மரம் மிகவும் பெரியதாக இருந்தது நான்கு பேர் சேர்ந்தால் தான் அதன் சுற்ற்ளவை அளக்க முடியும் அவ்வளவு அதிக சுற்றளவுள்ள உயரமான தேவதாரு மரம்.

அவ்வளாகத்தில்் உள்ள முக்கிய சன்னிதிகள், மிருத்யுஞ்சயர், "தாருகாவனே நாகேஸ்வர் "என்றபடி, நாகேஸ்வரர் சந்தியும் உள்ளது இவரை ஜோதிர் லிங்கம் என்று இங்குள்ளவர்கள் நம்புகின்றனர். மேலும் அம்பாளுக்கு தனி சந்நிதி, அம்மையின் திருநாமம் ஆபூதி அம்பாள், மேலும், கேதாரிஸ்வரர், அன்னபூரணி, துர்க்கை, அனுமன், வடுக பைரவர் ஆகியோர்களுக்கும் சன்னதிகளும் உள்ளன..

திரு தபஸ்வியுடன் ஜாகேஸ்வர் சுற்றுலா விடுதியில்

பின் டெல்லிக்காக கிளம்பினோம். கடைசியாகவும் எங்களை சோதிக்க விரும்பிய எம்பெருமான் ஒரு சிறு சிரமத்தை கொடுத்தார். வழியிலே ஒரு சிறு தடங்கல், பாதை அடைப்பு ஆகவே எங்கள் பேருந்து நிறுத்தப்பட்டது. அனைவரும் சாலையில் உட்கார்ந்து சிவபெருமானை நோக்கி பஜனை செய்தோம், சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. கரும் பச்சை, வெளிர் பச்சை, பச்சை என்று ஓடிய நதிகளை ரசித்துக் கொண்டே வந்தோம்.

கொல்லு தேவதா கோவிலில் திரு தனுஷ்கோடி

வழியிலே கொல்லு தேவதா எனப்படும் தெய்வத்தின் கோவிலுக்கு சென்று வழிபட்டோம் மிகச்சிறந்த பிரார்த்தனை ஸ்தலம். கோவிலெங்கும் மணிகள் கட்டப்பட்டிருக்கின்றன. பிரார்த்தனை நிறைவேறிய பின் கட்டியவை பெரிய மணியிலிருந்து சிறிய மணி என வழி நெடுக மணிகள். மாலை மூன்று மணியளவில் காத்தகோடம் வந்து அடைந்தோம். வங்காளத்திலிருந்து வந்திருந்த இரு யாத்திரிகள் அங்கிருந்தே கொல்கத்தாவிற்கு இரயில் வண்டி இருந்ததால் அனைவரிடமும் பிரியா விடை பெற்றனர். ஒரு மாத காலம் ஒன்றாக துன்பங்களையும் இன்பங்களையும் அனுபவித்த அவர்கள் பிரிந்து சென்ற போது கஷ்டமாகவே இருந்தது.

மாதா ச பார்வதி தேவி
பிதா தேவோ மஹேஸ்வர:
பாந்தவா சிவ பக்தா ச
ஸ்வதேசோ புவன த்ரயம்

என்ற படி நாம் அனைத்து சிவ பக்தர்களும் உறவினர்கள் என்ற உணர்வுடன் பிரிந்தோம். அங்கிருந்து பின் பொருட்களை ஒரு பெரிய பேருந்துக்கு மாற்றி, இரவு 11 மணியளவில் டெல்லி வந்தடைந்தோம். ந'ங்கள் டெல்லியில் நுழையும் போது இறைவன் வருண பகவானை அனுப்பி எங்களை ஆசிர்வதித்தான். ஆம் மழை எங்களை வரவேற்றது. குஜராத் சதன் அடைந்ததும் வெளியுறவுத் துறை வழங்கும் கைலாய யாத்திரையை முடித்த சான்றிதழ் எல்லாருடைய கையிலும் கிடைத்தது, எங்கள் L.O அதற்கான முயற்சிகளை செய்திருந்தார். அன்று இரவு நாங்கள் அனைவரும் உறங்கவேயில்லை, காலையில் எல்லோரும் அவரவருடைய ஊருக்கு செல்ல வேண்டும் என்பதால் யாத்திரையைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.

எண்மேலு மெண்ண முடையாய் போற்றி

ஏறரிய வேறுங் குணத்தாய் போற்றி

பண்மேலே பாவித் திருந்தாய் போற்றி

பண்ணோடி யாழ்வீணை பயிற்றாய் போற்றி

விண்மேலு மேலு நிமிர்ந்தாய் போற்றி

மேலார்கள் மேலார்கள் மேலாய் போற்றி

கண் மேலுங் கண்ணொன் றுடையாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி (28)

************



27ம் நாள் சிவசக்தி தரிசனம் முடித்து இல்லம் திரும்பிய நாள் - யாத்திரை சுப நிறைவு.

மலையரசன் பொற்பாவை சமேத திருக்கயிலை நாதரின் மாப்பெருங்கருணையினால் அவர்களின் அருமையான திருத்தரிசனம் பெற்று அ
வர்களை கிரி வலம் வந்து வணங்கி அவர்களின் இணையார் திருவடிகளில் வீழ்ந்து வணங்கும் வாய்ப்பைத் தந்த , அந்த பரம பிதாவிற்கும், ஜகன் நாயகிக்கும், மிகவும் அருமையான ஒரு யாத்திரையை கொடுத்தற்கு மனதில் கோடி கோடி நன்றியுடன் சென்னை திரும்பினேன் .

இனி மேல் கயிலாய யாத்திரை செல்பவர்களுக்கு உதவ வேண்டும் அதே சமயத்தில் அந்த பரம் பொருளின் புகழையும் எடுத்து இயம்பவேண்டும் என்ற எண்ணத்தை அந்த இறைவனே எண்ணுள் ஏற்படுத்தினான் அதனால் உருவானதே இவ்வலைப்பூ. மேலும் இப்பதிவில் உள்ள போற்றித் திருத்தாண்டகத்தை நம்பிக்கையுடன் எம்பெருமான் முன் திருவிளக்கேற்றி பாராயணம் செய்து வந்தால் அவர் கைலாய தரிசனம் தருவார் என்பது நிச்சயம்.

ஒம் நமசிவாய

இதுவரை விரிவாக இந்தியப்பகுதியில் செல்லும் யாத்தி்ரை பற்றி விரிவாக கண்டோம். நேபாள் வழியாக செல்லும் விழையும் அன்பர்களுக்கும் விதமாக அவ்வழி யாத்திரை பற்றி இனி வரும் பதிவுகளில் சுருக்கமாக காணலாம்.

4 comments:

sa said...

அருமையான் பதிவு. www.newspaanai.com இல் சேர்க்கவும். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட்.

Test said...

மிகச்சிறந்த தொடர் கட்டுரை, நேரிடையாக தங்களுடன் தரிசனம் செய்த மாதிரியான ஒரு திருப்தி. நன்றி

S.Muruganandam said...

//அருமையான் பதிவு. www.newspaanai.com இல் சேர்க்கவும்.//

நன்றி விஜய் அவர்களே தமிழ்ப்பாணையில் இணைக்கிறேன்.

S.Muruganandam said...

//நேரிடையாக தங்களுடன் தரிசனம் செய்த மாதிரியான ஒரு திருப்தி.//

திருக்கயிலை செல்ல இயலாதவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இத்தொடரை ஆரம்பித்தேன் அது ஈடேறியது குறித்து மகிழ்ச்சி.

ஓம் நமசிவாய