Monday, October 05, 2009

கைலாச மானசரோவர் தரிசனம் 2009 -3

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


வடக்கு முக தரிசனம்

கிரிவலத்தின் முதல் நாள் நாம் ஐயனின் மூன்று முகங்களையும் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்கின்றது. அதிகாலையில் அகோர முகமான தெற்கு முகத்தின் மேற்பாகத்தை முக்கண்ணுடன் தரிசனம் செய்கின்றோம். பின்னர் யமதுவாரத்திலிருந்து இம்முகத்தின் முழு தரிசனமும் கிடைக்கின்றது. கணேசர் நந்தி தரிசனமும் இங்கிருந்தே சித்திக்கின்றது. யமனின் எல்லையை விடுத்து தேவ பூமியில் கங்கா சூ என்னும் ஆற்றங்கரையோரமாக நடந்து சென்று மேற்கு முகமாம் சத்யோஜாத முகதரிசனமும், மேற்கு முகத்தின் முன்னர் உள்ள நந்தி தரிசனமும் பெறுகின்றோம். பின்னர் நடைப்பயணம் தொடர்கின்றது மேற்கு மற்றும் வடக்கு முகங்களின் இணைந்த தரிசனம் காண்கின்றோம். பின்னர் டேராபுக் முகாமை அடையும் போது வடக்கு முகத்தின் தரிசனம் கிட்டுகின்றது.
ஐயனின் ஜாடமுடியில் விளையாடும் நாகத்தை இம்முகத்தில் நாம் தரிசிக்கலாம். மேலும் சிவ சக்தியையும் நாம் தரிசனம் செய்கின்றோம்.


டேராபுக் முகாமில் இருந்து மேலே சிறிது மலையேற்றம் செய்தால் ஐயனின் பாத தரிசனம் கிடைப்பதோடு, ஐயன் பாதத்தில் இருந்து பாய்ந்து வரும் அவரது கருணை வெள்ளமான பனியாற்றைக் காணலாம், அந்த தீர்த்தத்தை பருகலாம். நாம் கொண்டு செல்லும் தெய்வ மூர்த்தங்களுக்கு அபிஷேகம் செய்யலாம்.


கீழே காணும் மூன்று படங்களும் கௌரி சங்கர் என்று அழைக்கப்படும் திருக்கயிலாயம் மற்றும் மானசரோவர் தடாகம் இணைந்த காட்சி. சிவ சக்தி என்று ஐதீகம். அதுவும் அருணோதய காலத்தில் வானமெங்கும் சிவப்பு நிறத்தில் ஜொலிக்க அம்மையாப்பரின் அற்புத தரிசனம் காண்கின்றோம்.


கௌரி சங்கர் தரிசனம்




இமயமலையின் உயர் மட்டங்களில் யாக் என்னும் இந்த சடை எருமைகள்தான் காணப்படுகின்றன. இவற்றைத்தான் திபெத்தியர்கள் தங்கள் வளர்ப்பு பிராணியாக பயன்படுத்துகின்றனர். இதன் பாலையே அவர்கள் அருந்துகின்றனர், யாக்கின் உரோமமே கம்பளி செய்ய பயன் படுத்தப்படுகின்றது. இவர்கள் யாக்கின் கொம்புகளை மங்களப் பொருளாக கருதுகின்றனர். எனவே யாக்கின் கொம்புகளை தங்கள் இல்லத்தின் முன்னர் மாட்டி வைக்கின்றனர். அவ்வாறு செய்வது அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கும் என்பது அவர்கள் நம்பிக்கை. இங்கே யாக்கின் கொம்புகளுக்கிடையில் திருக்கயிலாய தரிசனம்.

பிரதோஷ தரிசனம்
பிரதோஷ காலத்தில் தேவர்களும், மூவரும், அனைத்து ஜீவராசிகளூம் உய்ய திருக்கயிலாய மலையில் விஷ்ணு மத்தளம் வாசிக்க, சரஸ்வதி வீணை மீட்ட ஐயன் நந்தி தேவரின் கொம்புகளிக்கிடையே, விடமுண்ட நீலகண்டராக, மணீமிடற்றண்ணலாக. தியாகராஜராக ஆனந்தத் தாண்டவம் ஆடியருளினார். ஆகவே இன்றும் பிரதோஷ வேளையில் நந்தியெம்பெருமானின் கொம்புகளுக்கிடையே ஐயனை கண்டு தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம். அப்படிப்பட்ட பிரதோஷ தரிசனம் கண்டு களியுங்கள் அன்பர்களே.


இப்படங்களை தந்து உதவிய இந்த வருடம் திருக்கயிலாய யாத்திரை மேற்கொண்ட மும்பையைச் சார்ந்த திரு, பிரகாஷ் கோட்டிகர் மானசரோவர் தடாகத்தில் நீராடும் காட்சி. மானசரோவர் தீர்த்தம் எவர் உடலில் படுகின்றதோ அவர்களின் ஏழு தலை முறையினரின் பாவங்கள் அனைத்தும் சூரினைக் கண்ட பனி போல விலகி விடுகின்றது. எனவேதான் தேவர்களும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் நட்சத்திர ரூபத்தில் வந்து மானசரோவர் வந்து நீராடி எங்கோனையும் எங்கள் பிராட்டியையும் தரிசனம் செய்து செல்கின்றனர்.

பௌர்ணமி தரிசனம்

மேலே கிளிக்கினால் திரு. பிரகாஷ் அவர்களின் ஆல்பத்தை தாங்கள் காணலாம்.

Click above to see the original album of Shri. Prakash Gotikar and below to view his blog with more photos.

கீழே கிளிக்கினால் அவரது வலைதளத்தை இன்னும் நிறைய படங்களுடன் ஆங்கிலத்தில் படிக்கலாம்

http://prashantghotikar.wordpress.com



இத்தொடருக்கான பதிவுகள் இத்துடன் நிறைவு பெறுகின்றன. மலேசியாவிலிருந்து திருக்கயிலாயம் இரண்டாம் முறை சென்று உள் கிரிவலமும், நந்தி கிரிவலமும் செய்யும் பேறு பெற்ற கயிலை பாலா அவர்களின் அனுபவத் தொடருடன் பல அரிய புகைப்படங்களுடன் கூடிய ஐயனின் அருட்தொடர் இன்னும் தொடரும்....

Sunday, October 04, 2009

கைலாஷ் மானசரோவர் தரிசனம் 2009 - 2

கண்ணார் அமுதனே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

கிரீசன் என்று போற்றப்படும் மணிமிடற்றண்ணல், மாதொரு பாகன், சந்திரனுக்கு அருளிய பரம கருணா மூர்த்தி தியாகராஜன் சிவபெருமான், மஹா கௌரி, பர்வத புத்ரி, உமைநங்கையுடன் நித்ய வாசம் செய்து அண்ட சராசரங்களையும் பரிபாலிக்கும் தலம் தான் திருக்கயிலாயம். பூலோகத்தில் நாம் பூத உடலுடன் சென்று தரிசிக்கக் கூடிய தலம் கயிலை மலைதான். அந்த திருக்கயிலை தரிசனமும் மானசரோவர் தீர்த்த ஸ்நானமும், சிவசக்தியின் திருவருளாலேதான் சித்திக்கும். அவன் அருளால் அவன் தாள் வணங்கினால் நிச்சயமாக அவரின் தரிசனம் கிட்டும். இவ்வுணமையை அன்பர்கள் அனைவருக்கும் கூறும் முயற்சியே இப்பதிவுகள். உள்ளன்புடன் தினமும் அம்மையப்பரின் முன் திருவிளக்கு ஏற்றி வைத்து , கனக சபேசா, கயிலை வாசா உங்கள் தரிசனம் காட்ட வேண்டும் என்று வேண்டுபவர்களை அவர் என்றுமே கை விடுவில்லை. அது போல கடந்த ஒரு வருட காலமாக சந்திர சேகரரின் தரிசனம் பெற பிரார்த்தணை செய்து விளம்பரம் வந்த போது விண்ணப்பம் இட்டு முக்கண் முதல்வரால் அழைக்கப்பட்டு திருக்கயிலாயம் சென்று அவரின் தரிசனம் பெற்றவர் திரு, பிரகாஷ் கோட்டிகர் அவரது தரிசனத்தின் ஒரு பகுதியை முந்தைய பகுதியில் கண்டோம். மற்றும் சில காட்சிகளை இப்பதிவில் காணலாம்.

Shri Prakash Gotikar sincerely prayed to Lord Shiva and got this golden chance of darshan of Holy Kailash and a bath in Holy Manasarovar. If you also pray to Him sincerely you will not be let down by the Lord and Mother.


யமத்துவார் ( யமனுடைய வாயில்)

தார்ச்சன் ஆதார முகாமில் இருந்து யமத்துவாரம் வரை நாம் பேருந்தில் பயணம் செய்ய முடியும். இதுவரை யமனுடைய பகுதி, இதற்கு மேல் தேவ பூமி. அதாவது யமத்துவாரில் நுழைந்து வெளியே வந்தால் நாம் பிறப்பிறப்பை அறுத்து விட்டோம் என்பது ஐதீகம். மஹாபாரதத்தில் தர்ம புத்திரர் இங்கிருந்து சுவர்க்கம் சென்றார் என்று கூறுவோரும் உண்டு.

யமதுவாரத்தில் இருந்து நமக்கு திருக்கயிலை நாதரின் அகோர முகம் என்னும் தெற்கு முகத்தின் முழு தரிசனமும் நமக்கு கிட்டுகின்றது. கோரா என்றும் பரிக்கிரமா என்று திபெத்திய மொழியிலும் வடமொழியிலும் அழைக்கபப்டும் திருக்கயிலாய கிரிவலத்தை நாம் இங்கிருந்து தான் துவங்குகின்றோம்.

ஆமாம் முதன் முதலில் கிரி வலம் செய்தவர் யார் தெரியுமா? என்ன தெரியவில்லையா? சிறிது திருவிளையாடலை பற்றி யோசியுங்கள். அட சரியாக கண்டு பிடித்து விட்டீர்களே. சபாஷ் சொல்லிக்கோங்க. மாங்கனி பெற முதன் முதலாக அம்மையப்பரை வலம் வந்த விநாயகர் தாங்க நம்ம கிரி வலத்துக்கு முன்னோடி.


படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில் புரியும் பஞ்ச கிருத்ய பாராயணர் உலகமெல்லாவற்றையும் ஆட்டுவிக்கும் அம்பலக் கூத்தர் ஆனந்த தாண்டவ நடராஜரின் தெற்கு முகமான அகோர முகத்தின் தரிசனம் காண்கிறீர்கள்.

மேலே முக்கண்ணுடன் கூடிய ஐயனின் முக தரிசனம், கங்கை தேவ லோகத்தில் இருந்து இறங்கிய போது அவர் தாங்கிய ஜடாமுடி, இராவணன் கயிறு கட்டி இழுத்த போது உண்டான அக்ஷய வடக்கயிற்றின் தழும்பு ஆகியவற்றை தக்ஷிணாமுர்த்தி, கங்காதரரின் இம்முகத்தில் தரிசனம் செய்கின்றோம்.


ஐயனுக்கு வலப்பக்கத்தில் சிறிய தொப்பி போல உள்ள பனி மூடிய சிகரம் தான் கணேசர் என்பது ஐதீகம். ஆகாய கங்கை வடியும் இடத்தை (ஜடா முடி) முழுதுமாக நாம் தரிசனம் செய்கின்றோம்.






அஷ்டபத் மலையிலிருந்து தான் நாம் திருக்கயிலை நாதரின் மிக அருகில் சென்று தரிசனம் செய்கின்றோம். இங்கிருந்து கணேசர், திரி நேத்ரம், ஜடாமுடி, மற்றும் நந்தியை தரிசனம் செய்யலாம். கீழே நாம் காண்பது அஷ்டபத் மலையின் தரிசனம். தற்போது அஷ்டபத் மலைக்கு வாகனங்கள் செல்லுகின்றன. நிறை ஒரு கிலோ மீட்டர் மட்டுமே நடைப்பயணம் செய்ய வேண்டும் திருக்கயிலை நாதரின் திருவடிகளின் இணையார் திருவடிகளில் வீழ்ந்து வணங்க.






திருக்கயிலயங்கிரியை இந்துக்கள் மட்டுமா தங்கள் தெய்வம் என்று வணங்குகின்றனர்? அவர்களுடன் புத்தர்கள், ஜைனர்கள், மற்றும் திபெத்தியர்களும் திருக்கயிலாயத்தை தங்கள் கடவுளாக வழிபடுகின்றனர். ஜைனர்களின் முதல் தீர்த்தங்கரரான ரிஷப தேவர் இங்குதான் மஹா நிர்வாணம் அடைந்தார் என்பது ஐதீகம். நாம் மேலே காண்பது முதல் தீர்த்தங்கரரின் நினைவிடம். இது அஷ்டபத்தில் உள்ளது. கூடவே திருக்கயிலாயத்தையும் நந்தி தேவரையும் நாம் தரிசனம் செய்கின்றோம்.



வெள்ளிப்பனி
சூழ்ந்த திருக்கயிலையில் பால் வெண்ணீற்றுடன் பவள வண்ண எம்பெருமான் சிவபரம்பொருள், எல்லோருக்கும் எல்லா நலங்களையும் வழங்கும் சங்கரர் தன் பொற்கொடியாம் பச்சை பசுங்கொடி உமையம்மையுடன் கமனீயமான நவரத்னங்களால் அலங்கரிக்கப்பட்ட சுவர்ணமயமான ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கும் சிவசக்தியை தமது மூச்சுக்காற்றினால் குளிர்வித்துக் கொண்டிருப்பவர் நந்தியெம்பெருமான். ஐயனுக்கு எதிரே மேல் இருபடங்களிலும் நாம் ஐயனின் முதற்தொண்டர் , ஐயனை தினமும் தாங்கும் நந்திகேஸ்வரரையும் தரிசனம் செய்கின்றோம்.



மேலே கிளிக்கினால் திரு. பிரகாஷ் அவர்களின் ஆல்பத்தை தாங்கள் காணலாம்.

Click above to see the original album of Shri. Prakash Gotikar and below to view his blog with more photos.

கீழே கிளிக்கினால் அவரது வலைதளத்தை இன்னும் நிறைய படங்களுடன் ஆங்கிலத்தில் படிக்கலாம்

http://prashantghotikar.wordpress.com



திருக்கயிலை நாதரின் தரிசனம் தொடரும். . . . . . . .

கைலாஷ் மானசரோவர் தரிசனம் 2009 -1


ஒரு தடவை திருக்கயிலை நாதரின் தரிசனம் பெற்றவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அந்த மலையரசன் பொற்பாவையுடன் அமர்ந்து அருள் பாலிக்கும் அந்த திருக்கயிலை அரசரின் மாப்பெரும் கருணையை மறக்க முடிவதில்லை. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று அந்த சிவபெருமானின் கருணையை எப்போதும் எல்லோருக்கும் இயம்ப வேண்டும் என்ற அவா எப்போதும் அவர்கள் மனதில் இருக்கும்.

அடியேன் திருக்கயிலாய மானசரோவர் யாத்திரைக்கு சென்ற போது அப்போது தலை நகர் டெல்லியில் எங்கள் குழுவினருக்கு உணவுப் பொருட்களும் மருந்து பொருட்களும் தந்து பேசிய கைலாஷ் மானசரோவர் யாத்ரா சமிதி தலைவர் அவர்கள். எப்போது நான் கட்டிலில் சிறிது சாய்ந்தாலும் அந்த திருக்கயிலை நாதரின் அந்த காட்சிகள்தான் மனதில் நிற்கின்றன என்று கூறினார் அப்போது அது எதோ மிகைப்படுத்தப்பட்ட வாசகம் போலத் தோன்றியது. சிவ சக்தியின் தரிசனம் பெற்ற பின்புதான் அதன் உண்மை விளங்கியது. அல்லும் பகலும் அனவரதமும் அந்த காட்சி மனதை விட்டு அகலுவதே இல்லை. எப்போதும் அந்த திருக்கயிலை காட்சிதான் மனதில் அகலாது ஒடுகின்றது.


ஆகவேதான் இந்த தொடரை ஆரம்பித்து பல் வேறு புண்ணியர்களின் திருக்கயிலாய தரிசனத்தை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்தப் படங்கள் மும்பையில் (பாம்பே) வசிக்கும் திரு.பிரஷாந்த் கோட்டிகர் அவர்களுக்கு அம்மையப்பர் அளித்த தரிசனம். இவருடன் அடியேனுடன் இரண்டாம் முறையாக திருக்கயிலை நாதரின் தரிசனம் பெற்ற திரு.முட்கல் அவர்கள் ஆறாவது முறையாக தொடர்ந்து இடைவிடாமல் சென்று வந்திருக்கிறார் என்பதை அறிந்து சிவசக்திக்கு நன்றி செலுத்தினேன். இனி திருக்கயிலை நாதரின் யாத்திரை படங்களை பார்த்து மகிழுங்கள். கூடவே சிறிது குறிப்புகள் தங்களுக்கு உதவியாக இருக்கும்.


அன்ன பூர்ணா சிகரம்

முதலில் நாம் பார்க்கும் தரிசனம் அன்னபூரணி சிகரம். புதுடெல்லியில் மூன்று நாட்கள் தங்கி, மருத்துவ பரிசோதனை முடித்து பின் குழு விசா பெற்று மற்ற வேண்டிய தேவைகளை பூர்த்தி செய்த பின் டெல்லியில் இருந்து கிளம்பி இமயமலையின் ஸ்பரிசம் பெற்று மூன்று நாட்கள் பயணம் செய்த பின் தாரூச்சூலா( Dharuchula ) ஆதார முகாம் அடைந்து பின்னர் மாங்டி (Mangti) அடைந்து நடைப்பயணத்தை துவங்குகிறோம். முதல் நாள் காலாவில் ( Gala ) தங்குகிறோம் பின்னர் 4444 படிகள் இறங்கி பின் நடைப் பயணத்தின் இரண்டாம் நாள் புத்தியில் (Budhi ) தங்குகின்றோம். பின்னை ஒரு கடுமையான ஏற்றம் ஏறி சியாலே ( Chiyaleh) சமவெளியை அடைகின்றோம். சியாலேவில் இருந்து அன்னை பார்வதியின் நாமம் கொண்ட இந்த பனி மூடிய சிகரங்களின் தரிசனம் பெறுகின்றோம். அந்த அன்னையை இமவான் மகளாக பிறந்து கடுந்தவம் செய்த அன்னை பர்வதராஜன் மகள் பார்வதியின் திருத்தாள்களை வணங்கி 2009 யாத்திரையை தொடர்வோம்.


இந்தோ திபெத் பாதுகாப்புப் படையினர் (ITBP) திருக்கயிலாய யாத்திரை செல்லும் யாத்திரிகளுக்கு பாதுகாப்பு வழங்குகின்றனர். மிர்த்தியில் (Mirthi) இருந்து அவர்கள் யாத்திரிகளுடன் கூடவே வருகின்றனர். பல்வேறு இடங்களில் நாம் நடைபயணம் செல்லும் போது தங்களுக்கு கிடைக்கும் ரேஷனிலிருந்து தேநீர், உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆகியவற்றை நமக்காக வழங்குகின்றனர். அவர்கள் யாத்திரிகளுக்கு செய்யும் சேவை அளப்பரியது. அவர்களுக்கு மிக்க நன்றிகள். கூஞ்சியில் (Gunji)இருந்து காலாபானி செல்லும் வழியில் ITBPயினர் இவ்வாறு தேநீர் அளித்து யாத்திரிகளை உற்சாகப்படுத்துகின்றனர்.


நாக - நாகினி சிகரம்

புத்தியில் இருந்து கிளம்பிய யாத்திரிகள் சியாலேவை அடைந்து பூச்சமவெளியில் ( Flower Valley) அழகிய மலர்களின் தரிசனம் கண்டு காளி நதியின் கரையோரமாக பயணம் செய்து கூஞ்சியை அடைந்து அங்கு தங்குகின்றோம். உயர் மட்டத்தில் ஒரு நாள் ஓய்வு அன்று இரண்டாவது மருத்துவ சோதணை நடைபெறுகின்றது. பின்னர் கூஞ்சியில் இருந்து காலாபானிக்கு செல்லுகின்றோம். காலாபானியி செல்லும் வழியில் நாம் காணும் சிகரம் இந்த நாக பர்வதம். பாம்பு படம் எடுப்பது போல் தோன்றுவதால் இச்சிகரத்திற்கு இப்பெயர். கூடவே நாகினி (பெண் பாம்பு) சிகரத்தையும் காண்கின்றோம். காலாபானியிலிருந்தும் இச்சிகரத்தை காணலாம்.

வியாசர் குகை - காலாபானி

நாம் காலாபானியை நெருங்கும் போது வியாசரின் குகையைக் காணலாம். விஷ்ணுவின் அம்சமாக பிறந்து வேதங்களை நான்காக தொகுத்து நாம் உய்ய அளித்தவர் பராசரரின் புதல்வர் வேதவியாசர். அவரை இப்பகுதி மக்கள் தங்கள் தெய்வமாகவே கொண்டாடுகின்றனர். அவர் தங்கி உலவிய பகுதி என்பதால் இச்சமவெளி பியான்ஸ் சமவெளி என்றழைக்கப்படுகின்றது. கூஞ்சியில் வியாசருக்கு ஒரு கோவில் உள்ளது. செங்குத்தான மலையின் மேல் பகுதியில் குகை அமைந்துள்ளது. ITBPயினர் ஒரு தடவை மேலிருந்து இறங்கி குகைக்குள் சென்று பார்த்த போது குகை 18 அடி நீளம் இருந்ததைக் கண்டனர். உள்ளே யாக குண்டம், கமண்டலம் முதலியன இருந்தன.

ஓம் பர்வதம் - நாபிதாங்

காலாபானியிலிருந்து கிளம்பி நாபிதாங்கை அடைகின்றோம். நாபிதாங் ஒரு முக்கூடல். இந்திய நேபாள சீன எல்லைகள் இங்கு சங்கமிக்கின்றன. மேலும் காளி நதி உருவாக காரணமான நாபிதாங் கால்வாய் என்னும் நதி இங்கிருந்துதான் உற்பத்தியாகின்றது. மேலும் மூன்று சிகரங்கள் இங்கிருக்கின்றன. அவற்றுள் நடு நாயகமாக அமைந்திருப்பது ஓம் பர்வதம். தேவ நாகரி ஓம் என்னும் ஏகாக்ஷ்ரத்தை பனியில் இங்கு நாம் காணலாம். மற்ற இரண்டு சிகரங்கள் திரிசூல பர்வதம் மற்றும் நாபி பர்வதம்.

லிபு லே கணவாய் வழியாக சீனப் பகுதியில் நுழைந்து தக்லகோட்டில் ஒரு நாள் தங்குகின்றோம். பின்னர் பேருந்து மூலம் திருக்கயிலாய ஆதார முகாம் தார்ச்சன் அடைவதற்கு முன்னர் முதலில் இராவணன் ஏரியை கண்ணுறுகின்றோம். நமக்கு முதலில் திருக்கயிலை நாதரின் தரிசனம் கிடைப்பதும் இராக்ஷ்ஸ் தால் ஏரியிலிருந்துதான். இப்படங்களை எடுத்த திரு, பிரகாஷ் கோட்டிகரையும் காண்கின்றீர்கள். அவருக்கு நன்றிகள்.


தார்ச்சன் ஆதார முகாமில் இருந்து நமக்கு கிடைக்கும் திருக்கயிலையின் அருகாமை தரிசனம் இது. முக்கண்களுடன் கூடிய முக தரிசனமும், ஜடாமுடியின் மேற்பாகத்தையும் இந்த அகோர முகத்தில் நாம் தரிசனம் செய்கின்றோம்.

மேலே கிளிக்கினால் திரு. பிரகாஷ் அவர்களின் ஆல்பத்தை தாங்கள் காணலாம்.

Click above to see the original album of Shri. Prakash Gotikar and below to view his blog with more photos.

கீழே கிளிக்கினால் அவரது வலைதளத்தை இன்னும் நிறைய படங்களுடன் ஆங்கிலத்தில் படிக்கலாம்

http://prashantghotikar.wordpress.com



திருக்கயிலை நாதரின் தரிசனம் தொடரும். . . . . . . .