Sunday, December 23, 2012

கயிலை மலையானே போற்றி! போற்றி! -2


காத்மாண்டு

ஸ்ரீ அனந்த சயன நாராயணர் ஆலயம்.

புத்த நீல கண்டர் திருமுக சேவை

29-05-2012 அன்று மாலை நேபாள தலை நகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியது.  நான்கு பக்கமும் மலைகள் சூழ்ந்து  பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது காத்மாண்டு நகரம். விமானம் தரை இறங்கிய காட்சி அருமையாக இருந்தது. நேபாளம் வருபவர்களை வரவேற்கிறார் கருடன். அனைத்து ஆலயங்களிலும் முகப்பில் கருடனைக் காணலாம். இங்கே அஞ்சலி ஹஸ்தத்துடன் மண்டியிட்த நிலையில்கழுத்திலும் காதுகளிலும் நாக ஆபரணங்களுடம்ன் அற்புதமாக உள்ளது கருடன் சிலை.  Immigration  பணிகளை முடித்துக்கொண்டு வெளியே வந்தோம்.  விமான நிலையமெங்கும் அற்புதமான ஓவியங்கள், புத்தரின் வாழ்க்கை வரலாறு, பசுபதி நாதர் ஆலயம்  மற்றும்  பழங்குடி மக்களின் வாழ்க்கை ஆகியவை  கவின் மிகு ஒவியமாக தீட்டப்பட்டுள்ளன.   


காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையம் 

விமான நிலயத்தின் அலங்கார வளைவு

விமான நிலையத்தில் எங்கள் குழுவினர்

வெளியே வந்து  வண்டி மூலம்  நெரிசல் மிகுந்த காத்மாண்டு நகரைக்கடந்து சிவபுரி மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ள  பார்க் வில்லேஜ் ( Park Village Hotel & Resorts)  ஹோட்டலை அடைந்து அங்கி இரவு தங்கினோம்.  திரு. சுந்தர் அவர்கள்  ஜல் நாராயணன் ஆலயம் அருகில்தான் உள்ளது  என்று கூறினார். எனவே காலை எழுந்தவுடன் அலையாழி அரி துயிலும் மாயனை சென்று தரிசிக்க முடிவு செய்து உறங்கச்சென்றோம். 

சிவபுரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஹோட்டல்
 மற்றும் ஜல் நாராயணர் ஆலயம் 

நாங்கள் தங்கிய பார்க் வில்லேஜ் ஹோட்டல் 

ஹோட்டலின் வரவேற்பு பலகை 

ஹோட்டலில் அமைத்துள்ள பஞ்ச லோக புத்தர் சிலை

அதிகாலையில் எழுந்து அருகில் இருந்ததால் நடந்தே ஆலயத்திற்கு சென்றோம். இருள் பிரியும் அருணோதய காலத்தில் பெருமாளை தரிசனம் செய்தோம். ஆலயத்திற்கு செல்லும் வழியில் இரு பக்கமும் கோஷ்டத்தில் பல்வேறு தெய்வ முர்த்தங்களை அமைத்துள்ளனர். நேபாள ஆலயங்களின்  வழக்கமான  பஞ்ச லோக கருடன் சிலை இங்கும் அமைத்துள்ளனர். மேலும் கல்லால் வடித்த கருடாரூட விஷ்ணு பகவான் சிலையும் பசுபதி நாதர் போல நான்கு முக விஷ்ணு சிலையும் அருமை. 

இருள் பிரியும் அதிகாலை  நேரத்தில்
 ஸ்ரீ அனந்த நாராயணர் தரிசனம் 

ஜல நாராயணரின் நிர்மால்ய தரிசனம்

 நேபாள தலைநகர் காத்மண்டுவில் உள்ள மிகவும் பிரபலமான ஆலயம் ஸ்ரீ அனந்த சயன நாராயணர் ஆலயமாகும். இது புத்த நீலகண்டர் ஆலயம் மற்றும் ஜல் நாராயணர் ஆலயம்   என்றும்  இங்குள்ள மக்களால் அழைக்கப்படுகிறது. இவ்வாலயத்தில் மகாவிஷ்ணு , குளத்தின் மையப் பகுதியில் பின்னி பிணைந்த நிலையில் உள்ள 11  தலை ஆதி சேஷனில்   சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார். இயற்கை நீரூற்றின் மீது துயில் கொள்ளும் அனந்த சயன நாராயணர் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மனதில் அமைதியை வழங்குவதற்காக இவ்வாறு காட்சி அளிப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர். 

கணேசர் சந்நிதி


திருக்கதவ கருடன் 

காத்மண்டுவில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் சிவபுரி மலை தொடரின் அடிவாரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்ட குளத்தில் 5 மீட்டர் நீளமுள்ள கருங்கல்லால் ஆன பாம்புகளின் மீது புத்தநீலகண்டர் சேவை சாதிக்கின்றார். இந்த மகாவிஷ்ணு சிலை ஒரே கருங்கல்லால் வடிவமைக்கப்பட்டதாகும். ஒரு சமயம் வயதான கணவன் மனைவி இருவரும் தங்களின் விவசாய நிலத்தில் உழுது கொண்டிருந்த போது பூமிக்கு அடியில் இருந்து இந்த பிரம்மாண்ட சிலை வெளிப்பட்டுள்ளது. ஊர்காரர்களை அழைத்து வந்து காட்ட முயன்ற போது அச்சிலை மாயமாக மறைந்து விட்டதாம். பின்னர் சிறிது நாட்களுக்கு பிறகு மீண்டும் அந்த விவசாயி தனது நிலத்தை உழுது தொண்டிருந்த போது மீண்டும் பூமிக்கு அடியில் இருந்த வெளிப்பட்ட சிலையில் இருந்து ரத்தம் வழியத் துவங்கியதாக இக்கோயில் குறித்த வரலாறு கூறப்படுகிறது. இருப்பினும் இக்கோயிலில் அமைந்துள்ள மகாவிஷ்ணு சிலை சுமார் 1000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என நம்பப்படுகின்றது. இவ்வளாகத்தில் ருத்ராக்ஷ மரமும் உள்ள\து. 


 திறந்த வெளி பசுபதிநாதர் சந்நிதி

கல் கருடாரூட மஹா விஷ்ணு

நான்கு முக மஹா விஷ்ணு சிலை 

மகாவிஷ்ணு சிலை,13 மீட்டர் நீளமுள்ள குளத்தில் 5 மீட்டர் நீளத்தில் கால்களை குறுக்காக வைத்தபடி சயன கோலத்தில் உள்ளது. நான்கு கைகளிலும் முறைகே சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரை மலர் ஆகியன உள்ளன. இந்த சிலை சுமார் 7 அல்லது 8ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. சிவனைப் போன்று பழமையான நீல நிற கழுத்தை காணப்படுவதால் இவர் புத்தநீலகண்டர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். இவ்வாலயத்தில் விநாயகருக்கு ஒரு தனி சன்னதி உள்ளது. மற்றும் திறந்த வெளி பசுபதி நாதர் மேடையும் உள்ளது. 




காத்மாண்டுவில் உள்ள ஆலயங்கள் அனைத்திலும், ஏன் பல வீடுகளிலும் கூட கதவுகள்  மற்றும் பலகணிகள் அருமையான மர வேலைப்பாடுகளுடன்  காணப்படுகின்றன. எல்லா கதவுகளிலும் சூரிய சந்திரர்களையும், புத்த மதத்தினரின் எட்டு மங்கலப்பொருள்களையும் காணலாம். 



இந்த ஜல் நாராயணர் திறந்த வெளியில்தான்  உள்ளார் மேற்கூரை எதுவும் இல்லை ஒரு மஞ்சள் விதானம்தான் இவரை சூரியனிடமிருந்து காப்பாற்றுகின்றது. பக்தர்கள் இவரது திருவடிகளில் நின்று இவரை வணங்குகின்றனர். நாங்கள் அதிகாலையில் சென்ரதால் அலங்காரம் எதுவும் இல்லா நிர்மால்ய தரிசனம் கிட்டியது. 
  






நாங்கள் சென்ற போது கிரீடத்தை துணியால் மூடியிருந்தனர். சிறிது நேரம் சென்ற பின் அந்த துணியை எடுத்து விட்டு  தாரா பாத்திரத்தினால் அங்குள்ள புத்தருக்கு அபிஷேகம் செய்தனர்.  அந்த அரிய காட்சியை தாங்களும் காண்கின்றீர்கள்.   





திருவடி சேவை


ருத்ராக்ஷ மரம் 


ஆலய வளாகத்தில் பெரிய காண்டா மணியுடன்
எங்கள் குழுவினர் 


புத்த நீலகண்டரை தரிசனம் செய்துவிட்து ஹோட்டலுக்கு திரும்பி வந்து காலை சிற்றுண்டி  அருந்தி விட்டு காத்மாண்டு நாகரின் மற்ற ஆலயங்களை தரிசனம் செய்ய சென்றோம்.   


திருநாவுக்கரசர்  தேவாரம் 

திருக்கயிலாயம் 



கதித்தவன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடி
அதிர்த்தவ னெடுத்தி டல்லு மரிவைதா னஞ்ச வீசன்
நெதித்தவ னூன்றி யிட்ட நிலையழிந் தலறி வீழ்ந்தான்
மதித்திறை யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே. (2)


பொருள் : மன எழுச்சியை உடைய இராவணன் கோபத்தாற் கண்கள் சிவக்கப் பெரிய கயிலைமலையை நோக்கி ஆரவாரித்துக் கொண்டு ஓடிப் பெயர்க்க முற்பட்ட அளவில், மலைமகள்  பார்வதி அஞ்ச, எல்லோரையும் ஆள்பவனாகிய தவச்செல்வனான சிவபெருமான் தனது கட்டை விரலைச் சிறிது ஊன்றியிட்ட நிலையிலேயே அவன் ஆற்றல் அழிந்து கதறிக்கொண்டு விழுந்தான். பெருமான் அவனை அழித்தலைக் கருதி விரலை அழுத்தமாக ஊன்றியிருந்தால் இராவணன் மீண்டும் கண் விழித்துப் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்காது.

  யாத்திரை வளரும்.......

Saturday, December 22, 2012

Kailash Manasarovar Yatra -2012 -2

 Kathmandu

Jal Narayan temple

The beautiful view of Budh Neelkant

View of Jal Narayan at dawn 


Full view of Anantha Sayee

The Lord is in his yoga Nidra  (yogic sleep) on His  thousand hooded snake bed  holding His divine weapons  Conch, discus and mace  in His four arms and is floating in water (milk) ocean. he is decorated with lot of Salagramam. We were blessed with the Nirmalya darshan of the Lord ( ie without any  alangaram) as it was early morning. 




Tribhuvan  International Airport Kathmandu



We landed at the Tribhuvan International  Airport of Kathmandu and completed the immigration formalities  and enjoyed the murals drawn in the airport. most of them  depicted the history of Buddha.  The Garuda statue ( Mount of Lord Vishnu) installed in the premises was beautiful, we found the Garuda panel in all the temples and also in many houses.  The eight auspicious symbols of Buddhism are also found almost in all the houses.  Now Nepal has become a secular state, but  earlier it was a Hindu Nation and it's flag has Sun and Moon. We travelled to Park Village Hotel & Resort which is situated on the outskirts of  Kathmandu. Like any Indian city Kathmandu is also crowded and  traffic is chaotic and slow moving. When we neared the hotel Sundar remembered  that Jal Narayan temple is situated nearby. So we decided that we will first visit Jal Narayan first in the morning though we have not planned for the same. 




The beautiful gate of Airport


 Some members of our group at Airport
(In the background you can see the beautiful  Garuda) 


Next day ( 30-05-12 Wednesday)  early  morning we walked to  Jal Narayan temple. In this temple we have the darshan of Lord Vishnu  sleeping pose  in the thousand hooded snake Adi Sesha in a lake in the open only there is a cloth canopy over Him.  Like any other temple the welcome panel is Garuda panel and  doors are adorned with eight auspicious  articles. On the way to temple there are small niches with  several images of Gods. We enjoyed the beautiful dawn at the temple. The lord is  in yoga nitra and is holding His divine weapons Conch, Discus, Mace and  Lotus flower in his four arms.  The legend of the temple is that a farmer while tilling  his land one day found this statue  the statue disappeared immediately. Later the statue appeared again, this time the statue was installed at the present location.  



 Park Village hotel & Resort


 The hotel &  Jal Narayan temple are  located beautifully
 at the foot of the shivpuri  ranges  on the outskirts of Kathmandu



 Nice Buddha statue at the hotel 

The devotees worship the Lord from His feet and circumambulate the lake in which the Lord is sleeping. There are small shrines for Lord Ganesh and also a open shrine for Lord Pasupathinath. We saw a Rudraksh tree in the temple.  There are many shops shelling out pooja items you can shop for Rudraksh, Saligramam and other items here but be careful. We spent around one hour at the temple. At first the crown was covered with a saffron cloth, later a tiny priest removed the cloth and placed a  dhara vessel ( vessel from which water drips drop by drop)  above the figure of Buddha carved in the crown. Because of this Buddha in the crown the Lord is called Buddha Nilakanta, some say the lord’s neck is blue like Lord Shiva  so He is called so. We were told that only lucky few get to see the Buddha. Thanking the Lord we returned to the hotel .


Ganesh shrine



Garuda panel of Jal Narayan temple



All the houses have doors and balconys having very nice wood carvings, see the sun and moon and the auspicipus flower vase on the door.

 Open Pasupathinath shrine


Vishnu on His mount Garuda
(stone carving)

  Stone statue of Vishnu with four faces
 like Pasupathinath




The devotees worship the Lord from His  holy feet 



Buddha carved on the crown of the Lord 




Holy feet of the Lord



Rudraksh tree.



Our group at Jal Narayan, the giant bell as a background

This day was a day of acclimatization for high altitude  travel. We used this day to visit  the important shrines in Kathmandu.  See some photos of the Jal Narayan temple in this post.


 The Holy yatra continues.....


Wednesday, November 07, 2012

கயிலை மலையானே போற்றி! போற்றி! -1


திருக்கயிலாயம் மானசரோவர் யாத்திரை 2012



அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் சிவபரம்பொருள் நாம் எல்லாரும் உய்ய வேண்டி குடி கொண்ட கோவில்கள் ஆயிரத்தெட்டு என்பர் ஆன்றோர்.  அண்ட சராசரங்களையும் படைத்தும், காத்தும், அழித்தும், அருளியும் மறைத்தும் அலகிலா விளையாட்டுடை அந்த ஆனந்த கூத்தன் மலையரசன் பொற்பாவையுடன்  வசிக்கும் தலமான  திருக்கயிலாயம் தான் அவற்றுள் முதன்மையானது. வருடம் முழுவதும் பனி மூடி இருக்கும் அந்த வெள்ளிப்பனி மலையில், தேவர்கள், ரிஷி , முனிவர்கள், கந்தர்வ, கின்னரர்கள், யக்ஷ, கருடர்கள் சிவ சம்போ!  ஓம் நமசிவாயா! என்று துதி செய்து அஞ்சலி  ஹஸ்தத்துடன் நின்றிருக்க, பூத கணங்கள் அம்மையப்பரின் ஆணைக்காக காத்திருக்க பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறு அணிந்த பரமன் பச்சை பசுங்கொடியாம் கௌரி அம்மையுடன் நவரத்தினங்கள் இழைத்த கமனீயமான ஆனிப்பொன் ஊஞ்சலில், நந்தியெம்பெருமான் தன் மூச்சுக்காற்றால் குளிர்விக்க திருவோலக்கம் எழுந்தருளி சகல ஜகத்தையும் இயக்கும் தலம்தான் திருக்கயிலை.




காத்மாண்டுவில் உள்ள 52 அடி உயர சிவன் சிலை 


அந்த திருக்கயிலாய தரிசனம் பெற ஒருவர் ஆயிரம் ஜன்மம் தவம் செய்திருந்தால் மட்டுமே ஒருவருக்கு அந்த பாக்கியம் கிட்டும். ஏனென்றால் தேவர்களுக்கும் கூட திருக்கயிலாய தரிசனம் மிகவும் துர்லபமானது.   அவன்ருளால் இரண்டாவது முறையாக ஐயனை,  அவர் வசிக்கும்   திருக்கயிலை சென்று  தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டியது. அந்த ஆனந்தத்தை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவுகள்.  அகண்டாகார சிவபோகம் என்னும் பேரின்ப வெள்ளத்தை புசிப்பதற்கு சேர வாரும் செகத்தீரே! என்று அன்புடன் கை கூப்பி அழைக்கின்றேன்.

பார்வதி தேவி கணேசர் மற்றும் முருகருடன்



திருக்கயிலாயம் செல்ல இரண்டு வழிகள் உள்ளன. முதலாவது இந்திய அரசின் இந்தியா வழியாக நடைப்பயணமாக செல்லும் 30  நாள் பயணம் . இரண்டாவது நேபாள் வழியாக செல்லும்  13 நாள் பயணம். அடியேன்  முதல் தடவை சென்றது முந்திய பாதை, இந்த வருடம் சென்றது பிந்திய பாதை ஆகும். நாட்கள் குறைவு என்பதால்  சிலருக்கு உயர் மட்டத்திற்கு தகுந்தவாறு தங்களை மாற்றிக் கொள்வதில் சிறிது துன்பம் ஏற்பட்டது.

இனி திருக்கயிலை மலையின் சில சிறப்புகளை காணலாமா அன்பர்களே:
1.   திருக்கயிலாயம் என்றால் மணி என்று பொருள். 

2.   பிரம்மா தன் மனதில் இருந்து தோற்றுவித்ததால் மானசரோவர் அப்பெயர் பெற்றது.

3.    அகோர முகம் அதாவது தெற்கு முகம் நீலக்கடலைப் போன்ற நீல ஒளி விடும் நீலக்கல்லாக ஒளிர்கின்றது. சத்யோஜாதம் என்னும் மேற்கு முகம்  அந்தி மயங்கிய வான விதானம் போல மின்னும் மாணிக்கக் கல். வாம தேவ முகம் அதாவது வடக்கு முகம் பளபளக்கும் தங்கமாக பொன்னார் மேனியனாக திகழ்கின்றது பளபளக்கும் தங்கமாக பொன்னார் மேனியனாக திகழ்கின்றது. தத்புருஷ முகம் அதாவது கிழக்கு முகம் மின்னல் போல ஒளி வீசும் ஸ்படிகம் என்பது ஐதீகம்.

4.   திருக்கயிலாய மலையைப் பார்த்தால் ஆறு இதழ் கொண்ட தாமரையில் அமர்ந்திருக்கும் யோகியைப் போல தோற்றமளிக்கிறது.

5.   திருக்கயிலாயமும் மானசரோவரும் இணைந்து சிவசக்தி சொரூபமாகும்.

6.   வடக்கு முகத்தில் நாம் ஐயனுக்கு குடை பிடிக்கும் நாகத்தையும், சிவ சக்தியையும், தெற்கு முகத்தில் முக்கண்களையும், கணேசரையும், ஐயனுக்கு எதிரே நந்தி தேவரையும் தரிசனம் செய்கின்றோம்.

7.   இந்துக்களுக்கு மட்டும் அல்ல ஜைனர்களுக்கும்,புத்தர்களுக்கும், திபெத்தின் புராதான மதமான பான்களும் திருக்கயிலாயம் புனிதமானது. 

டில்லி விமானநிலையத்தின் சூரிய பகவான் 



ஒரு தடவை திருக்கயிலையை தரிசனம் செய்தவர்கள் அந்த அனுபவத்தை மறப்பது என்பது எளிதல்ல.  காலை எழுந்தவுடன் இரவு உறங்கும் வரை அந்த நினைவு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் அவ்வளவு இனிமையான  சிவையான அனுபவன் அது.   அடியேனுடன் பணி புரியும் திரு. சுதார் அவர்களிடமிருந்து இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் ஒரு மின்னஞ்சல் வந்தது.  அதில் ஜூன் மாதத்தில் திருக்கயிலை யாத்திரை மேற்கொள்ள விழைகின்றோம் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்ககாகத்தானே காத்திருந்தோம் என்று உடனே அவருக்கு அடியேனும் வருகின்றேன் என்று அறிவித்து அவன் தாள் வணங்கி அவனை தரிசனம் செய்ய வேண்டிய பணிகளை துவக்கினேன்.


 அம்மையப்பரை தரிசிக்க டில்லியிலிருந்து புறப்படுகின்றோம்


அடியேனுடன் திரு.சுந்தர் மற்றும் திரு. பாபு அவர்களும் இனைந்து கொண்டனர். மூவரும் உயர் மட்ட , பிராண வாயு குறைவான, சீதோஷ்ண நிலை தன் இஷ்டப்படி மாற்க்கூடிய பயணத்திற்காக வேண்டிய பணிகளை துவக்கினோம். கம்பளித்துணிகள், புற ஊதா கதிர்களை தடுக்கும் கருப்புக் கண்ணாடி, மலையேற்றத்தார்க்கான காலணிகள், சீனாவில் செலவு செய்ய யுவான்கள், மலையேற்றத்தின் போது  உட்கொள்ள, குளுகோஸ், சாக்கலேட்கள், நொறுக்கு தீனிகள், அவசியமான மருந்துகள், டார்ச் லைட் என்று யாத்திரைக்கு அவசியமான அனைத்து முஸ்தீபுகளையும் முடித்துக்கொண்டு மனதில் அண்ணலே தங்கள் தரிசனமும், கிரி வலமும் எந்த விக்கினமும் இல்லாமல் சித்திக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடனும் காத்திருந்தோம். இதில் சுந்தர் அவர்கள் புகைப்படங்கள் எடுப்பதில் நிபுணர் எனவே   வரும் பதிவுகளில் அவரின் அருமையான புகைப்படங்கலை அதிகமாக காண்பீர்கள். எழுத்து அளவாகவே மட்டும் இருக்கும்.

தில்லியில் இருந்து இயங்கும் Shreshta Holidays & Travels என்ற சுற்றுலா பயண ஏற்பாட்டாளர் மூலமாக இந்த யாத்திரையை மேற்கொள்ள திரு. சுதார் அவர்கள் ஏற்பாடி செய்திருந்தார். தில்லியிலிருந்து தில்லி 13 நாள் பயணம், பயண கட்டணம்  ரூ68000/-. விரும்புபவர்கள் காத்மாண்டிலிருந்து காதமாண்டு வரை ரூ61000/- செலுத்தியும் கலந்து கொள்ளலாம். உணவு, உறைவிடம், தினமும் இரண்டு பாட்டில் தண்ணீர் மற்றும் சீனப்பகுதியில் பயணம் செய்ய 25 யாத்திரிகளுக்கு மேல் இருந்தால் ஒரு Volvo பேருந்து மற்றும் காத்மாண்டுவில் தங்க மூன்று நட்சத்திர  ஹோட்டல்கள்  மற்றும் ஒரு நாள் காத்மாண்டு சுற்றுலா மற்றும் விசா கட்டணம் இதில் அடக்கம். சுதார் அவர்கள் மின்னஞ்சல் மூலம் தொடர்ச்சியாக யாத்திரை சம்பந்தபட்ட அனைத்து விவரங்களையும் அறிவித்துக்கொண்டிருந்தார்.

காத்மாண்டிற்கு விமானப் பயணம்


 இனி நேபாள் செல்லும் வழியின் கால அட்டவணை என்ன என்று காணலாமா அன்பர்களே:

முதல் நாள்:  தில்லியிலிருந்து நேபாள தலைநகர் காத்மாண்டு சென்று அங்கு இரவு தங்குதல்.

2ம் நாள்: காத்மாண்டு சுற்றுலா. பசுபதிநாதர் ஆலயம், பௌத்நாத், ஸ்வயம்பு நாத் புத்த விகாரங்கள் மற்றும் காத்மாண்டு நகரை சுற்றிப்பார்த்தல்.

3ம் நாள்: காத்மாண்டு-நைலம் (3750மீ) 150கி.மீ பயணம்  காத்மாண்டுவில் இருந்து திபெத்திய எல்லை நகரான கொடாரி சென்று திபெத்தில் நுழைந்து பின் நைலாம் சென்று அங்கு தங்கல்.

4ம் நாள்: உயர் மட்டத்தில்  பயணம் செய்வதற்காக உடலை தயார் செய்து கொள்ள நைலாமில் தங்குதல் மற்றும் மலையேற்றப்பயிற்சி.

5ம் நாள்: நைலாம் – சாகா  நைலாமிலிருந்து லா-லுங்-லா கணவாய் (16000 அடி) வழியாக , பிரம்மபுத்திரா நதியை கடந்து  சாகா அடைந்து அங்கு தங்கல்.

6ம் நாள்: சாகா – மானசரோவர் (4558 மீ) 450கி.மீ பயணம்
சாகாவில் இருந்து கிளம்பி மயூமா-லா கணவாய் (17000 அடி)  வழியாக ஹோர்சு அடைதல். அங்கு ஐயனின் முதல் தரிசனம் பின் மானசரோவர் அடைந்து அங்கு தங்கல்.

7ம் நாள்: மானசரோவர் தீரத்தில் சிவசக்திக்கு  யாகம் மற்றும் பூஜைகள். மற்றும் கிரிவலத்திற்காக உடலை தயார் செய்து கொள்ள மானசரோவரில் தங்கல்.

8ம் நாள்:  திருக்கயிலாய கிரிவலம் தொடக்கம்.  யமதுவாரத்திலிருந்து டேராபுக் வரை நடைப்பயணம்.  தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு முக தரிசனம். டேராபுக்கில் தங்கல்.

9ம் நாள்: டேராபுக் - ஜுடுல்புக்
கிரி வலத்தின் இரண்டாம் நாள் யாத்திரையின் கடினமான நாள். செங்குத்தான மலையேற்றம். 5200 மீ யாத்திரையின் மிக உயரமான டோல்மா கணவாய் ஏறி அன்னை பார்வதியை வணங்கி, அன்னை நீராடும் கௌரி குளத்தை தரிசனம் செய்து ஜுடுல்புக்கில் தங்கல்.

10ம் நாள்: கிரிவலத்தின் மூன்றாம் நாள், கிரிவலத்தை சுபமாக நிறைவு செய்தல். சுமார் 6 கி.மீ நடந்து வ‘ந்து, பின்னர் பேருந்து மூலம் டார்ச்சன் மூலமாக மானசரோவர் வந்து  தங்கல்

11ம் நாள்:  மானசரோவர் – சாகா

12ம் நாள்: சாகா – காத்மாண்டு திரும்புதல்.

13ம் நாள்: காத்மாண்டிலிருந்து தில்லி திரும்புதல்.

இது அவர்கள் அளித்திருந்த கால அட்டவணை ஆனால் யாத்திரையை மேற்கொண்ட போது இதில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன அவற்றையெல்லாம் வரும் பதிவுகளில் காணலாம்.  

காத்மாண்டு விமான நிலையத்தின் அழகிய கருடாழ்வார்

மே மாதம் 28ம் நாள் காலை Spicejet விமானம் SG – 321 மூலமாக   மூவரும் தில்லிக்கு புறப்பட்டு சென்றோம்.  அங்கு எங்கள் நண்பர்கள் திரு.உதயக்குமார் தங்குவதற்கு இடமும் வண்டியும் கொடுத்து உதவினார் திரு முரளிதரன் அவர்கள் உணவளித்தார். அன்றையதினம் தில்லியில் சுற்றுலா நடுத்துனர் அளித்த  அடையாளத்திற்காக எண் இட்ட  தண்ணீர்புகா பெரிய  பை மற்றும் கிரி வலத்தின் போது பொருட்களை எடுத்த செல்ல பயன்படுத்த வேண்டிய சிறிய தோள் பையையும் பெற்றுக்கொண்டோம். பின் வெளி நாடு செல்லும் போது எடுக்க வேண்டிய காப்பு (Insurance) எடுத்தோம். மற்றும் யாத்திரைக்கு வேண்டிய பொருட்களை வாங்கினோம்.அடுத்த நாள் அதாவது 29/05/12 மாலை  3:30 மணி  Spicejet விமானம் SG – 45 மூலம் 30 யாத்திரிகள் ஆலமுண்ட நீலகண்டனைக் காணும்   ஆவலில் காத்மாண்டிற்கு புறப்பட்டு சென்றோம்


ஒவ்வொரு பதிவிலும் திருக்கயிலாயப் பதிகங்களின் ஒரு பாடல் இடம்பெறும். திருக்கயிலைநாதனைக் காணும் ஆவலினால் கை கால்களில் உள்ள எலும்பு தேயுமாறு ஊர்ந்து சென்று இறைவனருளால் திருவையாற்றில் திருக்கயிலை காட்சி கண்ட கலை வாய்மை காவலனார் திருநாவுக்கரசர் பதிகத்தின் முதல் பாடல்


கனகமா வயிர முந்து மாமணிக் கயிலை கண்டும்
உனகனா யரக்க னோடி யெடுத்தலு  முமையா ளஞ்ச
அனகனாய் நின்ற வீச னூன்றலு மலறி வீழ்ந்தான்
மனகனா யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே. (1)

பொருள் :  பொன்னும் வயிரமும் மற்றும் மேம்பட்ட சிறந்த இரத்தினங்களும் நிறைந்த கயிலையைப் பார்த்தும் அதனைப் பெயர்த்து விடும் அகந்தையுடன் அரக்கன் இராவணன் ஓடி வந்து அதனைப் பெயர்க்க முற்பட்ட அளவிலேயே உமையம்மை அச்சம் கொள்ள, பாவமில்லாதவனாய் நிலை பெற்று எல்லோரையும் அடக்கி ஆளும் பெருமான் பெரு விரலை சிறிது ஊன்றிய அளவிலே  அவன் அலறிக்கொண்டு  செயலற்று கீழே வீழ்ந்தான். எம்பெருமான்  நிலைபெற்ற மனத்தினனாய்  விரலை அழுத்தி ஊன்றி இருந்தால் அவன் மீண்டும்  கண் விழித்து  பார்த்திருக்கவே முடிந்திருக்காது.  
                                                                                                                                                                                                                                                                                                           யாத்திரை வளரும்.......