Monday, June 24, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -34 (திருக்கயிலாய யாத்திரை-2012)

முதல் நாள் கிரிவலம் 3

டேராபுக் முகாமில்

அற்புதமாக வடக்கு முக தரிசனம் 

டேராபுக் முகாமை அடைவதற்கு முன் உள்ள பாலம்
(உமா கோயல்)




நாங்கள் தங்கிய கூடாரத்தின் அருகில் இருந்து ஐயனின் தரிசனம்
(இடப்பக்கம் உள்ள கூடாரம்)

கூடாரம்


மேகம் வெகு நேரமாக கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கின்றது

(நாக படம் மட்டும் மறைத்துள்ளது தற்போது)

வெள்ளிக் கவசம் பூண்ட காப்பு மலைகள்


யாக்குகள், குதிரைகள், மனிதர்கள்  என்று 
நிறைந்து இருக்கின்றது டேராபுக் முகாம்

பாதி முகம் மறைத்த கோலம்

மேகம் இன்னும் சிறிது விலகினால் போதும்...

இன்னும் காத்திருக்கின்றோம்

இன்னும் துளி மட்டும் விலக வேண்டும்....

முழுமையான அற்புத தரிசனம்

(உமா கோயல், புனிதா பரத்வாஜ்)

உதய சூரியன் போல வடக்கு முகம்


திருமுடி அருகாமை காட்சி

வெள்ளிப் பனி மலைகள்


அமீத் அகர்வால்

டேராபுக் முகாம்

நாங்கள் தங்கிய கூடாரம்

(உள்ளேயே சமையல் நடை பெறுகின்றது அருகிலேயே கடை, ஓரு சிறு கூடாரத்தில் 20 பேர் தங்கினோம்)

கூடாரத்தில் சுஜாய் ஹஜ்ரா அமீத் அஹர்வால்

புதிதாக கட்டப்பட்டுள்ள  சீன பாணிக் காலைக் கடம் மறைவிடம் 

ஐயனின் கருணையினால் பனிப்பொழிவு சிறிது நேரத்தில்  நின்றது. இரண்டாம் வணங்கிடத்திலிருந்து கிரி வலத்தை மறுபடியும் துவக்கினோம். மாசற்ற ஜோதி மலர்ச் சுடரை, தேனை, தேனாரமுதை, சிவபுரனை முழுதுமாக மேகங்கள் மறைத்திருந்தன, செல்ல செல்ல  பாதை செங்குத்தாக ஆகிக்கொண்டே சென்றது. டேராபுக் முகாம் கண்ணில் பட்டது ஆனால் அருகில்தான் வரவில்லை. நன்றாக மூச்சு வாங்கியது. ஈரத்தினால் காலணிகள் நனைந்து கால் வேறு கனத்தது. வேகம் மிகவும் குறைந்து விட்டது கடைசி கடைசியாக அடியேனுடைய போர்ட்டர் சிறுவன் இழுத்துக்கொண்டு போய் கூடாரத்தில் சேர்த்தான். இவ்வாறு அவரின் கருணையினால் முதல் நாள்கிரி வலம் அருமையாக நிறைவு பெற்றது. நாங்கள் டேராப்புக்கை அடைந்த சமயம் மழையே பெய்தது இன்னும் பலர் மழையில் நனைந்து கொண்டே வந்து சேர்ந்தனர்.

ஐயனை காண  மலையேறி வந்த களைப்பு தீர ஒரு அரை மணி ஓய்வெடுத்தோம் மாலை சுமார் ஐந்து மணி ஆகி விட்டது இன்னும் பாதிப் பேர் வந்து சேரவில்லை பனிப் பொழிவு முடிந்து சூரியனும் வெளிப் போந்தான் மேகங்களும் விலகி ஐயனின் வாமதேவ முகத்தின் அருமையான தரிசனம் கிட்டியது திகட்டாத தேனைப் பருகி வண்டுகளைப் போல மயங்கி நின்றோம். இவ்வளவு சோதனையும் தந்தது இந்த அருமையான தரிசனம் தரத்தானே ஐயனே என்று கை கூப்பிப் போற்றித் திருத்தாண்டகம் சேவித்தோம் கயிலை மலையானே போற்றி போற்றி என்று ஆயிரம் முறை கூறினோம். பனி அதிகமாக இருந்ததால் சென்ற தடவை பார்த்தது போல நேத்ர தரிசனம் மட்டும் ஸ்பஷ்டமாக கிட்டவில்லை. நாம் யாத்திரை செல்லும் காலம் மற்றும் அப்போது நிலவும் சீதோஷ்ண நிலையைப் பொறுத்தே நமக்கு தரிசனம் கிட்டுகின்றது என்பதற்காக இதைக் கூறுகின்றேன். ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு. நாம் நமது ஆலயத்தில் பெருமானுக்கு பல் வேறு அலங்காரங்கள் செய்து  தரிசித்து மகிழ்வது போல இது இயற்கை அன்னை ஐயனுக்கு செய்கின்ற அலங்காரம்  ஆகும்.

ஆனால் மேகங்கள் வெகு நேரம் கண்ணாமூச்சி விளையாடின. நாங்கள் முகாமை அடைந்த நேரம் முகம் முழுவதுமாக மேகத்தால் மூடப்பட்டிருந்தது, பின்னர் சிறிது சிறிதாக மேகம் விலக ஆரம்பித்தது. சூரியனும் முழுதுமாக வெளி வந்தான், முழுதும் பனியால் போர்த்தப்பட்டிருக்கின்ற முகத்தில் சூரிய ஒளி இன்னும் சோபையைக் கூட்டியது சிறிது சிறிதாக முழு முக தரிசனம் கிட்ட விடாமல் திருமுடியில் மட்டும் கொண்டல்கள் கொஞ்சிக் கொண்டிருந்தன, நாங்களும் எப்போது மேகம் விலகும், நாக படத்துடன் எப்போது முழு தரிசனம் கிட்டும் என்று காத்துக் கொண்டிருந்தோம், நிமிடத்திற்கு நிமிடம் மாறும் அழகை இரசித்துக்கொண்டே அதை புகைப்பட கருவியில் பதிந்து கொண்டிருந்தோம். நிறைவாக அந்த தருணமும் வந்தது, அற்புதமாக முழுமையான தரிசனம் கிட்டியது, கண்களில் ஆனந்தக் கண்ணீர், அடி விழுந்து வணங்கினோம்.

முன்னர் பார்த்ததற்கு டார்ச்சன் மிகவும் மாறி விட்டது அப்போது ஒரே ஒரு மண் விடுதி அதுவும் 30 பேர் தங்கக்கூடியதாக இருந்தது. தற்போது மண் கட்டிடங்களே நிறைய இருந்தது அதுவும் அனைத்தும் எழிலாக வர்ணம் தீட்டியுள்ளனர். அதுவல்லாமல் தனியார்களின் மண் வீடுகள் மற்றும் அநேக கூடாரங்கள் உள்ளன. பிரயாண ஏற்பாட்டாளர்கள் அமைத்துக் கொண்ட அவர்களது சிறு கூடாரங்கள் அநேகம் இருந்தது.  இங்கும் இவர்கள் ஒரு கூடாரத்தில்தான் தங்க ஏற்பாடு செய்திருந்தனர். நடக்கக்கூட இடம் இல்லாதவாறு கட்டில் ஒன்றோடு ஒன்று ஒட்டியவாறு போடப்பட்டிருந்தது. ஒரே கூடாரத்தில் சுமார் 20  பேர் தங்கினோம்.

திரு. சுதார் அவர்கள்  திருக்கயிலாய முகத்திலிருந்து ஓடி வரும் ஆறு வரும் இடம் வரை  மேலே சென்று சிவலிங்கம் சேகரித்துக் கொண்டு வந்து அனைவர்க்கும் வழங்கினார். அடியேன் ஐயனின் திருவடிகளில் அமர்ந்து ஏகாதச ருத்ர ஜபம் செய்தேன். இன்றைய தின பனிப்பொழிவையும் மற்றும் மலையேற்றத்தையும் பார்த்து விட்டு இரண்டு பேர் டார்ச்சன் திரும்பிச் செல்ல முடிவு செய்தனர். நாங்கள் தங்கியிருந்த கூடாரம் ஒரு ஹோட்டல் என்று சொல்லலாம், குளிர் பானங்கள் சீன நூடுல்ஸ் மற்றும் பல பொருட்களை விற்கின்றனர். உணவு சமைத்தும் அளிக்கின்றனர். இரவு ஒரு வண்டி வந்து அந்த பொருட்களையெல்லாம் இறக்கி விட்டு சென்றதை கவனித்தோம். வரும் காலத்தில் டார்ச்சன் வரை நல்ல தார் சாலை அமைந்தாலும் அமையலாம். இரவு பனிப்பொழிவு இருந்தது கூடாரத்தின் உள்ளே ஒழுகிய நீரின் மூலமாக தெரிந்தது. அதிகாலையில் எழுந்து ஐயனின் அற்புத தரிசனம் காண  விரும்பி உறங்கச் சென்றோம். இவ்வாறு கிரி வலத்தின் முதல் நாள்  பனிப்பொழிவுடன் கூடிய அருமையான தரிசன நாளாக அமைந்தது. 


4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சில்லென படங்கள்...

இயற்கை அன்னையின் அலங்காரத்தை ரசித்தேன்...

நன்றி...

S.Muruganandam said...

மிக்க நன்றி தனபாலன்

இராஜராஜேஸ்வரி said...

கயிலை மலையானே போற்றி! போற்றி!

அற்புதமாய் தரிசனம் செய்வித்தீர்கள்..நன்றிகள்..

S.Muruganandam said...

வாருங்கள் இராஜராஜேஸ்வரி.

மிக்க நன்றி.