Thursday, July 11, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -38 (திருக்கயிலாய யாத்திரை-2012)

கௌரி குளம்

டோல்மாவிலிருந்து  கீழிறங்கி செல்லும் பாதை முழுவதும்
தூய வெண்  பனியால் நிறைந்திருந்தது

கௌரி குளத்தை நெருங்கிறோம்



கௌரி குளம் அருகில் உள்ள சிறு குளம் 
இந்தத் தடவை கிடைத்த காட்சி

சென்ற யாத்திரையின் போது கிடைத்த காட்சி

( ஐயனின் பவள மேனியில்  பால் வெண்ணீறு  திகழ்வது போல இங்கே பாறைகள் எல்லாம் பனியால் மூடப்பட்டு சமவெளி போல  தெரிந்த இடம் எவ்வாறு  உள்ளது பாருங்கள்)

முழுவதும் உறைந்த கௌரி குளம்


 பச்சை  பசுங்கொடி   பார்வதி நீராடும்
 கௌரி குளம் மரகத வர்ணத்தில்  
சென்ற யாத்திரையின் போது இப்படி தரிசித்தோம்.

இன்ற யாத்திரையில் இப்படி தரிசித்தோம்

இப்படியும்  சில சமயம் தரிசனம் கிட்டும்


கௌரி குளத்தின் கரையில் 
அனில்-உமா கோயல் தம்பதியினர்

கௌரி அன்னையை வழிபடும் உமா கோயல்

டோல்மா கணவாயில் இருந்து செங்குத்தான  இறக்கத்தில் அமைந்துள்ளது கௌரி குளம் பனியில்லாத போது யாரும் அதன் அருகில் செல்வது மிகவும் கடினம் ஏனென்றால் மேலிருந்து பாறைகள் விழும் வாய்ப்புகள் அதிகம்.  ஆகவே யாரும் கௌரி குளத்திற்கு செல்வதில்லை. ஐயனின் பவள மேனியில் பால் வெண்ணீறு திகழ்வது போல,     இப்போது மலை முழுவதும் தூய வெண் பனி நிறைந்திருப்பதால் அன்னையின் குளத்திற்கு அருகில் செல்லும் வாய்ப்பு கிட்டியது. 


 கௌரி குளத்தில் இருந்து பனி படர்ந்த மலைப் பாதையில் இறக்கம்



அடியேனும் போர்ட்டர் சிறுவனும்






கீழே விழுந்த போது இந்த  போர்ட்டர் ரூபத்தில்தான்  தோடுடைய செவியன்  சிவ பெருமான் விடையேறி வந்து  காப்பாற்றினார்)

லாம் சூ சமவெளியை அடைந்து விட்டோம்

 மலைகளில் எத்தனை முகங்கள் 

லாம் சூவிலும் பனி தொடர்கின்றது

மலை முழுவதும் பனி  நிறைந்திருந்தால் எப்படி முதலில் இறங்குபவர்கள் இறங்கினார்களோ அதே வழியில் இறங்கினோம். சிறிது நேரம் சென்றபின் கண்ணில் கண்ட காட்சி அருமையாக இருந்தது. எதிரே கௌரி குளம் முழுதும் உறைந்து காட்சி அளித்தது. பாதை சரியாக இருக்கும் போது கௌரி குளத்தை நெருங்குவது மிகவும் கடினம், மேலிருந்து அப்படியே தரிசனம் செய்து விட்டு அப்படியே இறங்கி விடுவோம். பனி இவ்வளவு நிறைந்தருந்ததால்  இன்றைய தினம் அன்னை தானே  தங்களை கௌரி குளத்திற்கு அருகில் அழைத்து அருமையான தரிசனம் கொடுத்தாள். கௌரி குளத்தை மரகதக்குளமாக முன்னர் பார்த்திருந்தேன் இந்தத்தடவை அந்த அர்த்த சந்திர வடிவத்தை தூய வெள்ளை கௌரி குளத்தைப் பார்க்கும் பாக்கியம் அன்னை மலைமகள் அருளால் கிட்டியது.

லலிதா சகஸ்ர நாமத்தில் வரும் ஒரு நாமம் – அஷ்டமீ சந்த்ர- விப்ராஜ- தலிக-ஸ்தல சோபிதா, அரை வட்ட வடிவான அ|ஷ்டமி சந்திரனைப் போல் விளங்கும் நெற்றியுடையவள்; அந்த    நாமம் மனதில் பளிச்சிட்டது. அம்பாளை பஞ்சமி, பைரவி, பர்வத புத்ரியை, பஞ்ச நல் பாணியளை கொஞ்சிடும் குமரனை, குணமிகு வேழனை கொடுத்த நல் குமரியளை அவளது கருணைக்காக வணங்கி கீழே இறங்குவதை தொடர்ந்தோம்.

மேலே ஏறுவதை விட கீழே இறங்குவது மிகவும் கடினமானதாக இருந்தது. பனியின் காரணமாக பாதை வழுக்கலாக இருந்ததால் பலர் வழுக்கி விழுந்தனர். பாறைகளைப் பார்த்து பாதங்களை குறுக்காக வைத்து பார்த்து பார்த்து இறங்க வேண்டி வந்தது. அடியேனுடைய போர்ட்டர் சிறுவன் பாறைகளை தன் ஊன்று கோலினால் காண்பித்துக் கொண்டு கையைப் பிடித்துக் கொண்டு முன்னே செல்ல அடியேன்  எனது ஊன்று கோலை பார்த்து ஊன்றி மெதுவாக இறங்கினேன். அப்படியும் பல முறை கீழே விழுந்து எழுந்தேன். “தீ மேல் இடினும் ஜெய சக்தியென திடமாய் அடியேன் மொழியும் திறமும் அருள்வாய்” லலிதாம்பிகையே என்னும் லலிதா நவரத்ன பாடல் வரிகளை மனதில் ஜபித்துக்கொண்டு கீழிறங்கும் போது ஐயன் தனது திருவிளையாடலைக் காட்டி அருளினார்.  ஓர் இடத்தில் அடியேன் வழுக்கி விழுந்து என்னுடைய போர்ட்டர் சிறுவனையும் இழுத்துக் கொண்டு அம்மா! அங்காள பரமேஸ்வரி! என்று உருண்டு விழும் சமயம், திபெத்திய போர்ட்டர் போல உருமாறி அடியேனை கையைப்பிடித்து தடுத்து நிறுத்தி மேலே தூக்கி விட்டு அந்த கறை கண்டன், கறை படிந்த பற்களால் அடியேனை பார்த்து சிரித்தார். அடியேன் பாராயணம் செய்யும் ருத்ரத்தின் முழு அர்த்தம் அந்த கணத்தில் விளங்கியது. அனைத்து ஜீவராசிகளிலும் ஜீவனாகவும், ஈஸ்வரனாகவும் விளங்குபவர் அந்த சிவபெருமானே, நாம் நம்முடைய ஆணவம், கன்மம், மாயை என்னும் மலங்களை விட்டால் இந்த சீவனும் சிவனாகலாம். ஐயா நீயே சரணம் என்று அனைத்தையும் அவரது திருப்பாதங்களில் சமர்ப்பணம் செய்து விட நாம் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை, இதைத் தானே அப்பர் பெருமானும் "கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்" என்று பாடிப்பரவினார்.  பின்னர் மெதுவாக கீழிறங்கி லாம் சூ சமவெளியை அடைந்தோம்.

இவ்வாறு இன்றைய தினத்தின் மலையேற்றத்தையும் இறக்கத்தையும் சிவசக்தி  அருளால் முடித்தோம். இன்னும் நடக்க வேண்டிய தூரம்  உள்ளது அந்த  அனுபவமும் அப்போது கிடைத்த ஒரு அற்புத தரிசனமும் அடுத்த பதிவில் காணாலாமா அன்பர்களே.


4 comments:

இராஜராஜேஸ்வரி said...

கௌரி குளம் மரகத வர்ணத்தில் ஜொலித்து மனம் கவர்ந்தது ..

மிகுந்த பிராயசையுடன் பயணத்துக்ககும் பகிர்வுகளுக்கும் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்.. ..

S.Muruganandam said...

மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி

நிகழ்காலத்தில்... said...

இறை நம்மை காத்து வழிநடத்தும் என்பதை அனுபவமாக உணர்த்தும் இடம் இது..

S.Muruganandam said...

நன்றி சிவா