Sunday, November 16, 2014

தீரா வினை தீர்க்கும் திருக்கயிலை நாதர் தரிசனம் -3

திருக்கயிலாய மானசரோவர் தரிசனம் - 2014

காத்மாண்டு சுற்றுலா - 1

பசுபதி நாதர் ஆலயம், குஹ்யேஸ்வரி ஆலய தரிசனம் 



பசுபதி நாதர் ஆலயம் முகப்பு

பிரம்மாண்ட   நந்தியெம்பெருமான்



பசுபதி நாதர் ஆலயத்தைப் பற்றி அறிந்து கொள்ள இங்கு செல்லுங்கள் 



அருமையான மர வேலைப்பாட்டுடன் கூடிய ஒரு பலகணி 

அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் அடியேன்,
 சின்னபாப்பையா தம்பதிகள்

கோவில் வளாகத்தின் வெளியே புறாக்கள்


காசியைப் போலவே பசுபதிநாத்தும் இவர்களுக்கு இறக்க முக்தி தரும் தலமாகும். பாக்மதி ஆற்றங்கரையில் பல எரியூட்டும் மேடைகள் உள்ளன. அருகிலேயே முதியவர்கள் முக்தி பெறுவதற்காக தங்கி இருக்கும் முதியோர் இல்லங்கள் உள்ளன.  கோவிலின் உட்பிரகாரத்தில் முக்தி மண்டபமும் உள்ளது. காசியில் உள்ளது போலவே பசுபதிநாத்திலும் பைரவர் சிறப்பாகப் போற்றப்படுகின்றார். நேபாளம் முழுவதுமே பைரவர் வழிபாடு சிறப்பாக நடைபெறுகின்றது..

மஞ்சு நீள் மேனி வயிரவர் தாள் போற்றி
வண் சிலம்பொலிக்கும் மலர்பதங்கள் போற்றி
அரவெற்ற ரையின் அண்ணலடி போற்றி
சூலக்கபாலி துணைவன்தாள் போற்றி
தமருக பாசம் கொள் தலைவனடி போற்றி
சிரம் வாள் கை கொள் செல்வனடி போற்றி
சாந்து சவ்வாது புனுகணிவோன் தாள் போற்றி
அருளாதி வயிரவன் அடியினை போற்றி போற்றி.
என்று போற்றி வணங்கினோம்.

 இத்திருக்கோவிலில் தினசரி வழிபாடு  இவ்வாறு நடைபெறுகின்றது. காலை 6 மணிக்கு நடை திறக்கப்படுகின்றது. கர்ப்பகிரகத்தின் மேற்கு வாயில் மட்டும் திறக்கப்படுகின்றது ஐயனின் நிர்மால்ய தரிசனம் கிட்டுகின்றது. சுமார் 7  மணியளவில் இராவல் அவர்கள் வந்த பின் அலங்காரம் கலைத்து அபிடேகம் நடைபெறுகின்றது. காலை அபிடேகம் முடிந்தவுடன் சுமார் 9 மணிக்கு  நான்கு வாயில்களும் திறக்கப்படுகின்றது. பின்னரும் கட்டண அபிடேகங்கள் தொடர்கின்றன. பக்தர்கள் ஐயனின்  நான்கு முகங்களையும் தரிசனம் செய்து மகிழ்கின்றனர். மதியம் 1.00 மணியளவில் நடை அடைக்கப்படுகின்றது. பின்னர் மாலை 5.00 மணீயளவில் நடை திறக்கப்படுகின்றது. ஐயன் நான்கு முகங்களுக்கும் தலைப்பாகை மற்றும் குடை, நடுவில் ஒரு பெரிய குடை மற்றும் சர்வாபரண பூஷிதராக, மலர் மாலைகளுடன் அற்புத அலங்காரத்தில் அருட்காட்சி தருகின்றார். 7 மணியளவில் மாலை பூஜைகள் நடைபெறுகின்றது. பக்தர்கள் ஆரத்தி பாடல் பாட ஐயனுக்கு அலங்கார தீபம், கும்ப தீபம் முதலான தீபங்களினால்  அனைத்து முகங்களுக்கும் தீபாராதணை நடைபெறுகின்றது. பின்னர் சோடச உபசாரம் நடைபெற்று கற்பூர ஆரத்தி நடைபெறுகின்றது. அதற்குப்பின் தீர்த்த விநியோகம் ஒவ்வொரு கதவாக பூட்டப்பட்டு மேற்கு கதவு மட்டும் சிறிது நேரம் திறந்திருக்கின்றது. ஒரு சிலருக்கு சந்தன பிரசாதம் கிட்டியது. சுமார் 7.30 மணியளவில் நடை அடைக்கப்படுகின்றது. பின்னர் பாக்மதி ஆற்றங்கரையில் ஆற்றுக்கு கங்கா ஆரத்தி போல தீபங்களுடன் ஆரத்தி சிறப்பாக நடைபெறுகின்றது.      

பசுபதிநாதரை மலைத்தலைவனை, மலையாள் மணவாளனை, பவள வெற்பின் தேசுடையானை அற்புதமாக தரிசனம் செய்துவிட்டு ஐயா உன்னுடைய  திருக்கயிலாய தரிசனம் அருமையாக சித்திக்க வேண்டும் கிரி வலத்தையும் மேற்கொள்ளும் பாக்கியம் தரவேண்டும் என்று வேண்டிக்கொண்டு அடுத்து ஐயனின் வாம பாகத்தில் இருக்கும் அம்மனை . கௌரியை, உமையை, மலை அரசன் பொற்பாவையை தரிசிக்க சென்றோம்.  

பாக்மதி ஆற்றின் இப்பாலத்தைக் கடந்து
 குஹ்யேஸ்வரி ஆலயம் சென்றோம்

பாக்மதி ஆற்றின் கரையில் விளையாடும் குரங்குகள் 

குஹ்யேஸ்வரி ஆலய முகப்பு

குஹ்யேஸ்வரி ஆலயத்தின் சிறப்புகளை அறிய இங்கு செல்லுங்கள்

பாக்மதி ஆற்றங்கரையில் அன்னையின் ஆலயம் 

சிந்தூரம்

ஆலயத்தின் முன்னர் குழுவினர் 


தில்லைச்சிற் றம்பலமுஞ் செம்பொன் பள்ளி
    தேவன் குடிசிராப் பள்ளி தெங்கூர்
கொல்லிக் குளிரறைப் பள்ளி கோவல்
    வீரட்டங் கோகரணங் கோடி காவும்
முல்லைப் புறவம் முருகன் பூண்டி
    முழையூர் பழையாறை சத்தி முற்றங்
கல்லில் திகழ்சீரார் காளத்தியுங்
    கயிலாய நாதனையே காண லாமே.

பொருள்: தில்லைச்சிற்றம்பலம், செம்பொன்பள்ளி, தேவன்குடி, திருச்சிராப்பள்ளி, தெங்கூர், கொல்லி அறைப்பள்ளி, கோவல் வீரட்டம், கோகரணம், கோடிகா, முல்லைக் கொடிகளை உடைய காடுகளை உடைய திருமுருகன் பூண்டி, முழையூர், பழையாறை, சத்தி முற்றம், குறிஞ்சி நிலத்தில் திகழ்கின்ற சிறப்பு நிறைந்த காளத்தி ஆகிய திருத்தலங்களில் கயிலாய நாதனைக் காணலாம்.



புனித யாத்திரை தொடரும் . . . . . . . . . 

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

நாங்கள் சென்று வந்த நினைவுகளை மீட்டியது.. அருமையான பதிவுகள்..

S.Muruganandam said...

மிக்க நன்றி அம்மா. தொடர்ந்து வாருங்கள்.