Sunday, January 25, 2009

கண்டேன் அவர் திருப்பாதம் (திருக்கயிலாய தரிசனம்) -28

25ம் நாள் தாருசூலாவிலிருந்து ஜாகேஸ்வர் 300 கி.மீ பேருந்து பயணம்


அப்பர் பெருமான் அருளிச்செய்த
போற்றித் திருத்தாண்டகம்


திருக்கயிலாயம்

முன்னியா நின்ற முதல்வா போற்றி

மூவாத மேனி உடையாய் போற்றி

என்னியா எந்தை பிரானே போற்றி

ஏழி னிசையே உகப்பாய் போற்றி

மன்னிய மங்கை மணாளா போற்றி

மந்திரமும் தந்திரம் ஆனாய் போற்றி

கன்னியார் கங்கைத் தலைவா போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி. (26)


எங்கள் L.O அவர்களின் சொந்த வீடு தாருசூலாவில் உள்ளது, அவர் வழிபடும் கோவிலுக்கு சென்று அதிகாலையில் வழிபட்டு எங்கள் பேருந்து பயணத்தை துவக்கினோம். மழைக்காலம் முடிந்து விட்டதால் திரும்பி வரும் போது நிலச்சரிவுகள் ஏதும் இல்லை பழைய நிலச்சரிவுகளின் வடுக்கள் பல இடங்களில் காணக்கிடைத்தது. முதலில் அன்று ITBP தலமையிடமான மிர்த்தி சென்றோம் அங்கு அவர்கள் எங்களுக்கு வரவேற்பளித்து செல்லும் போது எடுத்த புகைப்படத்தை அனைவருக்கும் வழங்கினர்.

மிர்த்தி முகாமில் புகைப்படம் வழங்குகினர்

காலை சிற்றுண்டியும் வழங்கினர். அவர்களுக்கு நன்றி கூறி சிறு பரிசுகள் வழங்கினோம். பின் புறப்பட்டு அல்மோராவிற்கு அருகில் உள்ள மதிய உணவிற்கு பாதாள புவனேஸ்வரம் என்ற இடத்தை அடைந்தோம்.


இந்த யாத்திரை உத்தராஞ்சல் அரசின் KMVN மூலம் நடத்தப்படுவதால் திரும்பி வரும் போது குமோன் பகுதியின் பல்வேறு புண்ய தலங்களை தரிசனம் செய்யும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறே பாதாள புவனேஸ்வரமும், ஜாகேஸ்வர் என்ற இரு தலங்களும் இந்த வருட யாத்திரையில் சேர்க்கப்பட்டிருந்தன, போன வருட யாத்திரையிம் போது தத்தாத்ரேயர் கோவிலான பாகேஸ்வர் சென்றனர் என்பதை திரு. முட்கல் அவர்கள் மூலம் அறிந்தோம்.

பாதாள புவனேஸ்வரம் குகையின் முகப்பு

பாதாள புவனேஸ்வரத்தில் ஒரு அற்புதாமன குகை உள்ளது, அகில பிரமாண்டமும் அதிலே அடங்கியுள்ளன. இக்குகையின் பெருமைக்ளைப்பற்றி ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளன. பூகர்பத்தில் உள்ள இக்குகையை ஆதிசேஷன் உருவாக்கியதாக ஐதீகம், இக்குகையில் முதலில் சென்றவர் அயோத்தி அரசன் ரித்துபர்னா, ஒரு தடவை வேட்டையாடசென்ற போது ஒரு மானை துரத்திச் சென்ற அரசன் இக்குகைக்கு அருகே வர, ஆதிசேஷனே அவரை உள்ளே அழைத்து சென்று குகையின் எல்லா இரகசியங்களையும் விளக்கியதாகவும் ஆனால் இந்த இரகசியங்களை யாருக்கும் கூறக்கூடாது அவ்வாறு கூறினால் உடனே மரணம் சம்பவிக்கும் என்றும் கூற. ராஜா, ராணியிடம் இந்த இரகசியத்தை கூற உடனே அரசன் இறந்து விடுகின்றான். பின் ராணி இவ்விடத்திற்கு வந்து குகைக்குள் நுழையும் படிகளை வெட்டியதாக கூறப்படுகின்றது. பின் பல வருடம் ஆண்டுகளுக்கு பிறகு கட்யூரி வம்சத்தின் அரசன் சந்த் என்பவர் இக்குகையை புராணங்களின் அடிப்படையில் கண்டு பிடித்தார்.

மற்ற குகைக்களைப் போல தண்ணிர் பல இடங்களில் வடிந்து பல் வேறு வடிவங்கள் உருவாகியுள்ளன. ஆனால் அவை உவாகியுள்ள விதம் தான் ஆச்சரியத்தை உண்டாக்குகின்றது. இனி இக்குகையின் நுழைவு வாயில் ஒருவர் மட்டுமே நுழையும் வகையில் மிகவும் குறுகலாக உள்ளது. சுமார் 80 படிகளில் சங்கிலி துணையுடன் கீழே இறங்கினால் கீழே விரிந்து விலாசமான குகை பல் வேறு அற்புதங்கள் அதனுள் உள்ளன. முதலில் நாம் தரிசிப்பது இந்த உலகத்தை தாங்கிக் கொண்டிருக்கும் ஆதி சேஷனை, அதற்கு அருகிலேயே ஜனமேஜயன் நாகங்களை அழிக்க யாகம் நடத்திய யாக குண்டம் அதிலிருந்து தப்பித்த ஜனமேஜயனை தீண்டிய தக்ஷகன் என்ற நாகம், பின் ஆதிசேஷனுடைய எலும்புகள் போல் உள்ள தரையில் நடந்து எட்டு இதழ் தாமரை போல் உள்ள ஆதி கணேசரை தரிசிக்கிறோம். இதற்கு அருகிலே நான்கு சிவலிங்கங்கள் போன்ற அமைப்புகள் நான்கு புனித தலங்களான பத்ரினாத், கேதார்னாத், அமர்னாத் ஆகியவற்றை குறிக்கின்றன. பத்ரினாத்தின் ஐந்து பத்ரிகளை குறிக்கும் வகையில் ஐந்து சிறு லிங்கங்கள் அருகிலே. அதற்கு அருகிலே கால பைரவைரின் திறந்த வாய் அதிலே நாக்கு தண்ணிர் வழிந்தோடுவது எச்சில் போலவே காட்சி அளிக்கின்றது. காலபைரவருக்கு எதிரிலே சிவபெருமானின் ஆசனம், அவருக்கு அருகே பாதாள் சண்டி தலை மாலையுடன். அடுத்து நான்கு வாயில்கள் உள்ளன, அவை நான்கு யுகங்கலைக் குறிக்கின்றது. முதலாவது பாவத்துவாரம் இது இராவணனுடைய சம்ஹாரத்திற்கு மூடப்பட்டது. இரண்டாவது வழி போர் துவாரம் இது மஹாபாரத யுத்ததிற்கு பிறகு மூடப்பட்டது. அடுத்த வழி தர்ம துவாரம் கலியுகத்தின் முடிவில் இந்த வழி அடைந்து போகும். நான்காவது வழி மோட்ச துவாரம் இது சத்ய யுகத்திற்கு பிறகு மூடப்படும். ஸ்கந்த புராணத்தில் உண்மையான நம்பிக்கையோடு மோட்ச துவராத்தில் நுழைபவர்கள் மோ சத்தை அடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழியாக உள்ளே சென்றால் கிருஷ்ணர் தேவலோகத்திலிருந்து கொணர்ந்த பாரிஜாத மரத்தை காணலாம். அதற்கு அடுத்தது கடி வனம் ஹனுமன் அயிராவணனுடன் போரிட்ட இடம். அதற்கு அருகிலே மார்க்கண்டேயர் குகை இதில் அமர்ந்து தான் மார்க்கண்டேயர், மார்க்கண்டேய புராணம் இயற்றியதாக நம்பப்படுகின்றது.

சிவபெருமானின் ஜடாமுடி

இதற்கு மேலே காமதேனு, காமதேனுவில் பால் பிரம்மாவின் ஐந்தாவது கபாலத்தின் மேல் விழுகின்றது. இங்கு பித்ரு தர்ப்பணம் செய்யலாம். அதிலிருந்து சிறிது து‘ரம் சென்றால் தலை திரும்பியுள்ள அன்னப்பறவை, மற்றும் ஏழு குளங்கள், பாற்கடலை கடைந்து வந்த அமிர்தம் இந்த குளங்களில் இருந்தன அமிதர்தத்தை நாகங்களிடமிருந்து காப்பாற்ற அன்னப்பறவையை பிரம்மா காவலாக வைத்தார், அந்த அன்னப்பறவையே அமிர்தத்தை பருகியதால் தலையை பிரம்மா திருப்பியதாக ஐதீகம். அதற்கு அருகிலே சிவபெருமானின் ஜடாமுடி, கருமையும், வெண்மையும் கலந்து உண்மையான ஜடாமுடி போலவே தோன்றுகின்றது அதன் அடியிலே ஒரு குளம் அது கங்கை அதன் கரையிலே நடுவே சிறிது பெரிதாக நர்மதேஸ்வரர்அவரைச் சுற்றி முப்பத்து முக்கோடி தேவர்களும் மிக சிறிய லிங்கங்களாக. அடுத்து உள்ளே சென்றால் பாதாள புவனேஸ்வரர், மும்மூர்த்தி சொருபமாக அருள் பாலிக்கின்றார்.
மும்மூர்த்தி ரூப பாதாள லிங்கேஸ்வரர்
தண்ணிர்த்துளிகள் மாறி மாறி மும்மூர்திகளின் மேல் விழுவது ஒரு அதிசயம். இந்த லிங்கத்திற்கு ஆதி சங்கர பகவத் பாதாள், கைலாயம் செல்லும் போது கும்பாபிஷேகம் செய்துள்ளார் தாமிரத்தகடு போர்த்ததினார். பாதாள புவனேஸ்வரருக்கு மஹா சனி பிரதோஷ வழிபாடு மிகவும் விசேஷம். அன்று இவரை வழிபடுபவர்கள் 21 தலைமுறைகளுக்கு நன்மையை தேடித்தருவதாக ஐதீகம்.

இதற்கு மேலே பாண்டவர்கள் சொர்க்கம் சென்ற இடம் இரண்டு பெரிய லிங்கங்கள் சிவ சக்தியை குறிக்கின்றன அவர்களுக்கு எதிரே ஐந்து சிறிய லிங்கங்கள் பஞ்ச பாண்டவர்களை குறிக்கின்றன. அவர்களுடன் சென்ற நாயும் உள்ளது. திரும்பி வரும் போது நான்கு லிங்கங்கள் நான்கு யுகங்களை குறிக்கின்றது, கலியுகம் மட்டும் உயரமாக உள்ளது. இறுதியாக அயிராவதம், தந்தம், காது ஆயிரம் கால்களும் இயற்கையாகவே உருவாகியுள்ளன.
சிவசக்தியும் பஞ்ச பாண்டவர்களும்
இவ்வாறு இக்குகையில் உள்ள அதிசயங்களை புராண கதைகளுடன் எளிதாக இனைக்க முடிகின்றது. உண்மையில் அதிசயப்படாமல் இருக்க முடியவில்லை. பாதாள புவனேவரிலிருந்து புறப்பட்டு பின் நீண்ட நேரம் பயணம் செய்து இரவு ஜாகேஸ்வர் என்ற தலத்தை அடைந்தோம். அன்று இரவு ஜாகேஸ்வர் KMVN சுற்றுலா விடுதியில் தங்கினோம்.

25ம் நாள் உத்தராஞ்சல் மாநில சுற்றுலா நாள்


No comments: